பதிவு செய்த நாள்
18 மே2020
09:01
பணம் பண்ண, இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, வரவை பெருக்குவது; இரண்டாவது செலவை குறைப்பது. இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்வது உத்தமம். வரவை பெருக்குவதை விட, செலவை குறைப்பது சுலபம் என்பதால் தான், பெரியவர்கள் செலவை குறைப்பதை பற்றி அதிகம் வலியுறுத்துகின்றனர்.
‘ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்தால், 1,000 ரூபாய் சம்பாதிப்பதை போல’ என்ற வாக்கியத்தில், ஆழ்ந்த பொருள் உள்ளது. ஆயிரம் ரூபாய் ஈட்டுவதற்கு ஏற்படும் உழைப்பை விட, 1,000 ரூபாய் செலவை குறைப்பதற்கான உழைப்பும், நேரமும் மிக குறைவு.வரவை பெருக்க நிறைய திட்டமிடல் வேண்டும். அவற்றில் ஒரு சிறு பங்கு செய்தாலே, செலவை குறைத்து விடலாம். ‘வரவை பெருக்க எல்லையே இல்லை; ஆனால், ஓர் அளவிற்கு மேல் செலவை குறைக்க முடியாதே?’ என்று, நீங்கள் கேட்பதில் உண்மை உள்ளது.என் கணிப்பில், ஒவ்வொரு குடும்பமும், 20 சதவீதம் செலவை குறைப்பது, சற்று திட்டமிட்டாலே சாத்தியம்; இது, முழுக்க முழுக்க மன ரீதியான திட்டமிடல் தான்.
உளவியல் மாறுதல்செலவை குறைப்பது என்பது, இகழ்வான செயல் அல்ல என்பதை, உள் மனம் நம்ப வேண்டும். செலவு செய்கையில் ஏற்படும் அகந்தை, செலவை குறைப்பதில் ஏற்படாது. சமூகம் சார்ந்த செலவுகளில் கிடைக்கும் அங்கீகாரத்தை இழக்க நேரிடும்; சில உறவு சிக்கல்களை சமாளிக்க வேண்டி வரும். ஆனால், இந்த உளவியல் மாறுதல்கள் நிகழ்ந்தால், செலவு குறைப்பால் ஏற்படும் நீண்ட கால பலன்கள் மிக மிக அதிகம்.கொரோனா தாக்கத்தால் பல நிறுவனங்கள் சம்பள குறைப்பு செய்வதை பார்க்கிறோம். அது, நம்மை உடனடியாக கடுமையாக பாதித்தாலும், செலவு குறைப்பிற்கான திட்டமிடலை துவங்குகிறோம். ஆடம்பரம் எது, அத்தியாவசியம் எது என்று கணக்கு போட்டு, செலவை குறைக்கிறோம். கொஞ்சம் நினைத்து பாருங்கள், இந்த திட்டமிடலை, கடந்தாண்டு எந்த துாண்டுதலும் இல்லாமல், நாமாக செய்திருந்தால், இந்த நெருக்கடி நேரத்தில், எவ்வளவு சேர்த்து வைத்திருப்போம்! செலவு குறைப்பை, ஒரு திணிப்பாக எடுத்துக் கொள்ளாமல், நாமாக முன் வந்து மேற்கொள்ளும் ஒரு தேர்வாக எடுத்துக் கொண்டால், நெருக்கடி காலங்களை எவ்வளவு சுலபமாக கடக்கலாம்!இதை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம், ‘அவன் கஞ்ச பிசினாரி, அவன் காசுன்னா ரொம்ப கெட்டிப்பா, 1 ரூபாய் கொடுக்க அப்படி யோசிப்பான். நமக்கெல்லாம் இருந்தா, கணக்கு பாக்காம செலவு பண்ணுவோம்...’ என்பது போன்ற, செலவு குறைப்பு பற்றிய நம் எண்ணங்கள்!சிக்கனமான ஆசாமிகளை, சில ஜாதிப் பெயர்கள் சொல்லி திட்டுவோம். இவ்வளவு செல்வம் இருந்தும், செலவு குறைத்தல் முக்கியம் என்று அவர்கள் எண்ணுகின்றனரே... ஏன் என்று யோசித்துள்ளோமா? சிக்கனம் என்பது விழுமியம்.
நிர்வாக ஒழுங்குதேவையானவற்றுக்கு, தேவையான அளவு மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் என்ற நிர்வாக ஒழுங்கு தான், அவர்களின் செல்வத்தை பெருக்குகிறது. சரியானவற்றில் முதலீடு செய்ய வைக்கிறது; தொழில்களை துவங்க வைக்கிறது; தானம் செய்ய வைக்கிறது.பத்து சதவீதம் செலவு குறைத்தல் என்பது, மாத வருமானம், 10 ஆயிரம்- மட்டும் சம்பாதிக்கும் ஒரு எளிய குடும்பத்திற்கு, மாதம், 1,000 வீதம்-, ஆண்டிற்கு, 12 ஆயிரம் ரூபாய்- என்று சேமிக்க வைக்கிறது; இது, அவர்களை பல நெருக்கடிகளிலிருந்தும், அநியாய வட்டியிலிருந்தும் காப்பாற்றும். சுருக்கமாகச் சொன்னால், 12 மாதத்தில், 13 மாத வருமானம் வருவதை போல இது. வசதியான குடும்பங்கள் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அது உங்களை எப்படி முன்னேற்றும் என்று! ஒரு நிறுவனம், 1 சதவீதம் செலவை குறைத்தாலே, அது பெரிதும் லாபமடையும்.அதனால், முதலில் உங்கள் மனோபாவத்தை மாற்றுங்கள். செலவு குறைப்பை, ஒரு சாதனையாக செய்யுங்கள். காசில்லாததால் செலவை குறைப்பது என்றில்லாமல், கையிருப்பை அதிகப்படுத்த, முதலீடு செய்ய, சேமிக்க, அவசர செலவிற்கு, வருங்கால திட்டத்திற்கு என, ஏதோ ஒரு பலமான நோக்கத்துடன் செலவு குறைப்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் முழு மனதாக இதை ஒப்புக்கொண்டால், குடும்பத்தில் அனைவரிடமும் இது பற்றி பேசுங்கள். எதில் குறைப்பது என்பதில், எல்லாருடைய ஆலோசனைகளையும் கேளுங்கள்.
எது வீண் செலவுபல நிறுவனங்களில், நான் இது பற்றிய பயிற்சி அளிக்கையில், பெரும்பாலான நல்ல யோசனைகள், பணியாளர்களிடம் இருந்து தான் வரும். ஒரு கம்பெனியில், ‘அட்மின்’ துறையின் செலவுகள், 3 சதவீதம் குறைய காரணம், அங்கிருந்த கடைநிலை ஊழியர் கொடுத்த ஒரே ஒரு ஆலோசனை தான்.கெத்து காண்பிப்பதற்காக நாம் செய்யும் செலவுகளும், ‘இல்லை’ என்று சொல்ல தெம்பு இல்லாமல் செய்யும் செலவுகளும், பிள்ளைகளுக்கு, ‘செல்லம்’ என்ற பெயரில், நாம் செய்யும் தண்டச்செலவுகளும் மிகச் சுலபமாக குறைக்கக் கூடியவை.எது வீண் செலவு என்று பட்டியல் போட, ஒரே வழி தான். வாங்கி பயன்படுத்தாத பொருட்களை, பட்டியல் போடுங்கள். அதை வாங்கிய நாளில், கொடுத்த விலைக்கு வங்கி தரும் வட்டிக் கணக்கை போடுங்கள்; உங்களுக்கே புரியும்.
‘மினிமலிசம்’அடுத்த ஓர் ஆண்டிற்கான செலவுகளை திட்டமிடுங்கள். சொல்லாமல் வரும் செலவுகளுக்கு, ஒரு தொகை வைத்துக் கொள்ளுங்கள்.பின், எவற்றை, எவ்வளவு குறைக்கலாம் என்று பாருங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கினால், தேவையான விஷயங்களை, உங்கள் வாழ்க்கையில் தியாகம் செய்ய வேண்டி வரும்.தயாரிப்பு நிறுவனங்களில், ‘லீன்’ எனும், செலவை குறைத்து; வரவை பெருக்கும் ஓர் உற்பத்தி தத்துவத்தை பின்பற்றுவர்.இன்று, ‘மினிமலிசம்’ என்பது, வளர்ந்த நாடுகளில் பரவி வரும் வாழ்க்கை முறை. தேவையை குறைத்து வாழ்தல் தான், நிறைந்த வாழ்க்கை என்பதை உலகத்திற்கு முதலில் சொல்லி, அதன்படி வாழ்ந்து காட்டியவர், நம் பொக்கை வாய் தாத்தா காந்தி!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|