பதிவு செய்த நாள்
18 மே2020
09:09
பி.எப்., திட்டத்தில் குறுகிய கால பலனை விட, நீண்ட கால நோக்கிலான பலனே முக்கியம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் அண்மையில், ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., திட்டத்தில், ஊழியர் மற்றும் நிறுவனம் சார்பில் பிடித்தம் தொகை மூன்று மாதங்களுக்கு குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி வழக்கமான பிடித்தம் செய்யப்படும், 12 சதவீத பங்களிப்புக்கு பதில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் கையில் கிடைக்கும் சம்பள தொகை ஓரளவு அதிகரிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கம் என்ன?தற்போதைய சூழலில், இந்த சலுகை ஆசுவாசம் அளிக்கக் கூடியதாக தோன்றினாலும், பி.எப்., கணக்கில் பிற்காலத்தில் கையில் கிடைக்கும் தொகையில் இது தாக்கம் செலுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தொகை சொற்பமானதாக தோன்றினாலும், பி.எப்., சேமிப்பு தொகை குறைவது, பல்வேறு நிதி அம்சங்களில் தாக்கம் செலுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.உதாரணமாக, ஒருவர் மூன்று மாத காலத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுகிறார் என வைத்துக்கொண்டால், ஊழியர் மற்றும் நிறுவனத்தின், 10 சதவீத பங்களிப்பு தலா, 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும். வழக்கமான விகிதத்தில் இது, 21 ஆயிரத்து, 600 ரூபாயாக இருந்திருக்கும். தற்போது, வேறுபடும் தொகை, 3,600 குறைவான தொகையாக தோன்றினாலும், பி.எப்., திட்டம் நீண்ட கால நோக்கிலானது என்பதால், பல ஆண்டுகளுக்கு பின் கூட்டு வட்டி அடிப்படையில் இந்த தொகை அளிக்க கூடிய பயன் கணிசமாக இருக்கும். இது குறைந்துவிடும்.பி.எப்., கணக்கில் சேரும் தொகை குறைவது, இரண்டு விதங்களில் தாக்கம் செலுத்தும். பி.எப்., பிடித்தம், வருமான வரிச்சலுகைக்கு பொருந்தக்கூடியது.இந்த தொகை குறைவதால் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டிய வருமானம் அதிகரிக்கும். இரண்டாவதாக, இதனால், எதிர்காலத்தில் கிடைக்கும் மொத்த பி.எப்., தொகை குறையும். பி.எப்., திட்டம், ஓய்வு காலத்தில் கைகொடுக்க கூடிய நீண்ட கால சேமிப்பு திட்டம் என்பதால், இது பாதகமானது.
ஈடு செய்யும் வழி!இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, உறுப்பினர்கள் இப்படி பங்களிப்பு குறைவதை ஈடு செய்வதன் அவசியத்தை உணரலாம். எனவே, வாய்ப்புள்ள ஊழியர்கள், பி.எப்., திட்டத்தின் ஒரு அங்கமான, வி.பி.எப்., எனப்படும் தானாக முன்வந்து பங்களிப்பை அதிகமாக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, வழக்கமாக பிடித்தம் செய்யப்படும் தொகை கணக்கில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளலாம்.வி.பி.எப்., வசதி பொதுவாக, வரி சேமிப்புக்கான உத்தியாக பயன்படுத்தப்படுகிறது. ஊழியர் மட்டுமே இவ்வாறு தொகையை உயர்த்த முடியும். இதற்கு நிகரான நிறுவன பங்களிப்பு கிடையாது. ஆனால், பி.எப்., வட்டி விகிதம் பொருந்தும். வரி சேமிப்பு பலனும் உண்டு. நீண்ட கால நோக்கில் சேரும் தொகை அதிகரிக்கும். இருப்பினும், இந்த வசதியை ஆண்டு துவக்கத்தில் நாட வேண்டும். தற்போது இதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்கள், பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., கணக்கு வைத்திருந்தால், அந்த திட்டத்தில் நிகரான தொகையை செலுத்தலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|