பதிவு செய்த நாள்
08 ஜூன்2020
13:25
செலவுகளைக் குறைப்பது, சேமிப்பது, இருக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது, இவையெல்லாம் பொருளாதார தன்னிறைவிற்கான வழிகள். ஆனால் இவை, பணப் பெருக்கத்திற்கான வழிகள் அல்ல. வருமானத்தைப் பெருக்குவது என்பது, வேறொரு திசையில் சிந்திப்பது. ஓர் உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்...
ஓர் உற்பத்தி நிறுவனத்திற்கு, மாதம், 10 லட்சம் ரூபாய் வருமானமாக வருகிறது; 9 லட்சம் செலவாகிறது. செலவு குறைத்தல் என்பது திறமையான வழிமுறைகளில் என்று உணர்ந்து, அதை கட்டுப் பாடுடன் நிர்வாகம் செய்து, செலவுகளை, 9 லட்சத்திலிருந்து, 8.5 லட்சமாக குறைத்தால், நிகர லாபத்தில், 50 ஆயிரம் ரூபாய் சேர்கிறது. இது ஓர் அணுகுமுறை.
நிகர லாபம்
பத்து லட்சம் ரூபாய் வருமானத்தை, அடுத்த ஆண்டு, 20 லட்சமாக அதிகரிக்க முடியுமா என்று செயல்படுவது, இதன் எதிர் திசை அணுகுமுறை. இப்போது செலவு, 18 லட்சம் வரலாம். அதையும் குறைத்தால், 17 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால், நிகர லாபம் இப்போது இரட்டிப்பு ஆகிறது. இரு அணுகுமுறையும் தேவை என்று சொல்கிறேன். இரு அணுகுமுறைகளுக்கும் இடையே ஆதார வேறுபாடு ஒன்றே ஒன்று தான். செலவு குறைப்பிற்கு ஒரு வரம்பு உள்ளது. வருமானப் பெருக்கிற்கு வரம்பு இல்லை. மன அளவில் இரு அணுகுமுறையும் வெவ்வேறு நம்பிக்கைகளுடன் செயல்படுபவை. ஒன்று, பத்திரப்படுத்தும் மன நிலை; இன்னொன்று, பாதுகாப்பு உணர்வை சற்று பணயம் வைத்து, புதிய முயற்சிகள் செய்வது. மீண்டும் சொல்கிறேன், இரண்டும் அவசியம்.
பெரிய நிறுவனங்களில் இந்த செயல்பாடுகளைச் செய்ய, இரு துறைகள் உண்டு. இதற்கு முன் சொன்ன, அதே உற்பத்தி நிறுவன உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உற்பத்தி துறை, மூலப்பொருளை குறைந்த விலையில், 60 நாள் தள்ளி பணம் தருவதாகச் சொல்லி வாங்கி, குறைந்த ஆட்களைக் கொண்டு, உற்பத்தி திறனைப் பெருக்கி, உற்பத்தி செலவைக் குறைக்கும். விற்பனை துறையின் செயல்பாடுகள் இதற்கு எதிரானவை. இவர்களுடைய கொள்கை, எவ்வளவு மிச்சம் பிடிப்பது என்பது அல்ல.
அதிக செலவு
எங்கு, புதிய வாடிக்கையாளர்கள் உள்ளனர், புதிய பொருட்களுக்கான தேவைகள் எங்கு உள்ளன, போட்டியாளர்களை விட நாம் ஜெயிக்க என்ன மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது, பொருளின் விலையை சற்று மாற்றி அமைத்து, அதிகம் விற்க முடியுமா, வேறு சலுகைகள் தந்து விற்கலாமா என்று நிறுவன வருமானத்தைப் பெருக்குவது தான் அவர்கள் குறிக்கோள்.
இதில் சில செலவுகளும், முதலீடுகளும் செய்ய வேண்டி வரும். சில முயற்சிகள் பலன் அளிக்காது. ஆனால், சந்தையில் நிலைக்க, விளம்பரம் செய்வது, 'பிராண்டிங்'குக்காக செலவு செய்வது என, பல நேரங்களில் அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். ஆனால், நிறுவனத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு எது தேவை என்று சிந்தித்து செயல்பட, விற்பனை துறை பெரிதும் உதவும். பல சிறு நிறுவனங்களில் முதலாளியே இந்த, எதிர் எதிர் துறை பொறுப்புகளை மேற்கொள்ளும் போது, இரண்டில் ஒன்றை கோட்டை விடுவது இயற்கை. நல்ல வாய்ப்புகள் இருந்தும், பல நிறுவனங்கள் வளராமல் போவதற்கு காரணம், இந்த இரு மாறுபட்ட திறன்களை வளர்த்துக் கொள்ளாததே.
நான் நிறுவனத்திற்குச் சொன்ன அதே உதாரணம், எல்லா பணியாளர் குடும்பத்திற்கும் பொருந்தும். மாதம், 30 ஆயிரம்- ரூபாய் சம்பளம் என்று வைத்துக் கொள்வோம். இதில் செலவைக் குறைத்து, 5,000 ரூபாயை சேமிப்பது என்பது ஒரு வழிமுறை. இந்த, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் தவிர்த்து, கூடுதலாக, 5,000 ரூபாய் சம்பாதிக்க நினைப்பது இன்னொரு வகையான அணுகுமுறை. கூடுதல் வருமானம் என்றால், அது தவறான வழிமுறை என்றோ, அல்லது வேலைக்கு ஒவ்வாத செயல் செய்ய வேண்டும் என்றோ பொருளில்லை.
கூடுதலாக, 5,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், பகுதி நேர வேலை அல்லது வர்த்தகம் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசிக்கலாம். உங்கள் வாழ்க்கை துணை வீட்டில் இருந்தால், அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று விவாதிக்கலாம் அல்லது உங்கள் வேலையிலேயே வருமானம் பெருக, கடுமையாக உழைக்கலாம்.
வழிமுறைகள்
அதிக வருமானம் என்பதை குறிக்கோளாகக் கொண்டால், 1,000 நல்ல வழிமுறைகள் கண்ணுக்குத் தெரியும். அவற்றில் பாதுகாப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து, சிறிய அளவில் முயற்சி செய்து பார்க்கலாம்.நலிவடைந்த வர்க்கத்தில் உள்ள படிக்காத பெண்கள் பலரிடம், இந்த முனைப்பையும், முயற்சிகளையும் நான் தினம் தினம் பார்க்கிறேன். ஒரு தையல் மெஷின் வைத்து, பகுதி நேரத்தில் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். வீட்டில் இருந்து தொழில் செய்ய, 1,000 வழிகள் உள்ளன. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு ஆசைப்பட்டால், அவை கண்ணில் படாது. நீங்கள் மனதார முடிவு செய்து இறங்கி தேடினால், உங்களுக்கானது கண்ணில் படும். இது பிரபஞ்ச விதி. உங்களுக்கு உதவ, சரியான ஆட்கள் வருவர். நீங்கள் நினைத்ததை விட, அதிகம் உதவுவர். உறுதியான எண்ணம் இருந்து தேடுங்கள்.
உபரி வருமானம் தரும் வேலைகள், தொழில்கள் இங்கு நிறைய உள்ளன.உங்கள் வருமானத்தை, இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று உறுதியாக வைராக்கியம் கொள்ளுங்கள். செலவுகளைக் குறைப்பது போல, வரவைப் பெருக்கவும் நிறைய வழிமுறைகள் உள்ளன. 'இதற்கு மேல் முடியாது' என்ற எண்ணத்தை மாற்றி, 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தை விதைத்து விடுங்கள். அது, பல அற்புதங்களை அறுவடை செய்து காண்பிக்கும்!
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|