கண்காணிக்கப்படும் சீனா: அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படும் சீனா: அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ...  ஓய்வு கால பலன் பாதிப்பை   சரி செய்வது எப்படி? ஓய்வு கால பலன் பாதிப்பை சரி செய்வது எப்படி? ...
பாலைச் சுரக்க விட்டு, பின் கறங்களேன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
00:59

கடந்த, 15 நாட்களாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஏன் இந்த திடீர், தொடர்ச்சியான, முன்னெப்போதுமில்லாத விலையுயர்வு? என்ன நடக்கிறது?

கடந்த, 7ம் தேதி முதல், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை அன்றாடம் உயர்த்தத் தொடங்கின. நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருந்தபோது, 82 நாட்களாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை. அதன்பின், நேற்று வரை, தொடர்ந்து, 15 நாட்களாக உயர்த்தப்பட்டதில், பெட்ரோல், டீசலின் விலை, கிட்டத்தட்ட, 8 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

16 டாலர்
மக்களும், குறு, சிறு வர்த்தகர்களும், வாகன போக்குவரத்துத் துறையினரும் அதிர்ச்சியடைந்து விட்டனர்;


என்ன காரணம்? இரண்டு காரணங்கள். ஒன்று, உள்நாட்டுக் காரணம் என்றால், இன்னொன்று சர்வதேச நிலையை ஒட்டியது.மத்திய அரசுக்கு கிடைத்து வரும், ஜி.எஸ்.டி., வருவாய், நேரடி வரி வருவாய் ஆகியவை, கொரோனா காலத்தில் சரிந்து விட்டன. அதே நேரத்தில், மக்கள் மற்றும் தொழில்துறையினரின் மீட்சிக்குத் தேவைப்படும் நிதியாதாரங்களைப் பெருக்க வேண்டிய நிலை.


இதில், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பது, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி தான்.மார்ச், 14 அன்று, பெட்ரோல், டீசல் மீது தலா, 3 ரூபாய் கலால் வரி உயர்த்தப் பட்டது. அதன்பின், மே, 5ம் தேதி, பெட்ரோல் மீது, 10 ரூபாயும், டீசல் மீது, 13 ரூபாயும், கலால் வரி உயர்த்தப்பட்டது. பொதுவாக இந்த வரி உயர்வு, பொதுமக்களை, அப்போதே பாதித்திருக்க வேண்டும்.ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, பீப்பாய் ஒன்றுக்கு, 16 டாலர் வரை விலை குறைந்திருந்ததால், நாம் கொள்முதல் செய்யும் விலையும் குறைவாக இருந்தது; அதனால், அடக்கவிலையும் குறைவாக இருந்தது. பெட்ரோல், டீசலின் விற்பனை விலை குறைக்கப்படாமல், கலால் வரி உயர்வு அதற்குள்ளேயே எடுத்துக் கொள்ளப்பட்டது.மக்களுக்கு அப்போது பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

‘ரிபைனரி மார்ஜின்’

கலால் வரி உயர்வினால் மத்திய அரசுக்கு, 2.4 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.ஜூன் மாதம் நிலைமை மாறத் தொடங்கியது. ஏப்ரலில், 16 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், கடந்த, 19 அன்று, 42 டாலராக உயர்ந்துவிட்டது. இதனால், நாம் கொள்முதல் செய்யும் விலையும் உயர்ந்தது. இப்போது, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலின் அடக்க விலையும் உயர்ந்து விட்டது.


இதன் மீது ஏற்கனவே உள்ள மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரி ஆகியவை இணைந்து கொள்ள, ஒவ்வொரு நாளும் விலை உயர்வு. சரியாகச் சொல்வது என்றால், பெட்ரோல், டீசல் விலையில், அதன் உற்பத்திக்கான அடக்கவிலை ஒரு பங்கு என்றால், மத்திய – மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே, மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.இதோடு இன்னொரு பிரச்னையும் சேர்ந்து கொண்டது.


82 நாட்களில், பெட்ரோல், டீசலின் கிராக்கி அதிகமாக இல்லை. ஆனால், அவர்களுடைய உற்பத்தி செலவு குறையவில்லை. அதாவது கடந்த, 6ம் தேதிவரை, 1 லிட்டர் பெட்ரோல் உற்பத்தியில், 1.28 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை ஈடுகட்டவும், மீண்டும் லாபம் ஈட்டவும் விலை உயர்வு அவசியமானது.


தற்போது, விலை உயர்வு மீண்டும் ஆரம்பித்துள்ளதால், 1 லிட்டருக்கு, ‘ரிபைனரி மார்ஜின்’ என்று சொல்லப்படும், சுத்திகரிப்பு நிறுவனத்தின் லாபம், 90 காசுகள் உயர்ந்து உள்ளன.இதன் இன்னொரு முனை, சர்வதேச தன்மை கொண்டது.அதாவது எண்ணெய் துரப்பண வளைகுடா நாடுகளின் அமைப்பான, ‘ஓபெக்’ மற்றும் அதன் நேச நாடான ரஷ்யா ஆகியவை, கொரோனா காலத்தில் உற்பத்தியைக் குறைத்து விட்டன. பொருளாதார நெருக்கடிகச்சா எண்ணெய் இருப்பு அதிகமாக இருந்ததால், அதன் விலை சர்வதேச சந்தையில் குறைந்து கொண்டே வந்தது.


இந்தச் சரிவைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டது. அதாவது, ஒரு நாளைக்கு, 97 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் துரப்பணம் குறைக்கப்பட்டது. இதனால் தான், 16 டாலரில் இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 42 டாலர் அளவுக்கு உயர்ந்தது. அதாவது, 162 சதவீத விலை உயர்வு. இந்தக் கடுமையான விலையேற்றமும் நம்முடைய பெட்ரோல், டீசலின் விலையைப் பாதித்துள்ளது.

இந்த நியாயமான காரணங்கள் அனைத்துமே, நமக்கு புரியாமல் இல்லை. இப்போது வேறு கேள்விகள் எழுகின்றன.கொரோனாவினால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நம் நாடு மீண்டு வரும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதற்கு குந்தகம் விளைவித்து விடாதா?கடந்த, 15 நாட்களிலேயே காய்கறிகள், மளிகைச் சாமான்களின் விலைகள் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளன.


ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள விலையுயர்வோடு, இதுவும் சேர்ந்து கொண்டுள்ளது. பணவீக்கம்பொதுவாக, 50 அல்லது 100 ரூபாயில், தங்கள் வாகனங்களுக்கு கொஞ்சமாக பெட்ரோல் போட்டுக் கொண்டு வேலைசெய்யும் சில்லரை வணிகர்கள், அன்றாடங்காய்ச்சிகள் இப்போது கணிசமான பாதிப்பைச் சந்திக்கின்றனர்.


அவர்கள் பையில் பொத்தல் விழத் தொடங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து பல இடங்களில் தொடங்கப்படாத நிலையில், பெரும்பாலோர் சொந்த வாகனங்களையே நம்பியுள்ளனர். அவர்களுடைய மணிபர்சில் பெட்ரோல், பெருந்தீயை வைத்துள்ளது. டீசல் விலையோ, சரக்குப் போக்குவரத்து கட்டணங்களை ஊதிப் பெரிதாக்கிவிட்டது. இவையெல்லாம் ஒரு விஷயத்தைத் தான் செய்யும்.


500 ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால், முன்பு இரண்டு பைகள் நிறைய சாமான்கள் வாங்கிய இடத்தில், தற்போது அரை பை கூட நிரம்பாது. 25 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு பிளேட் இட்லி, 35 அல்லது 40 ரூபாய்க்கு எகிறும்.அதாவது, குறைவான பொருட்களை, அதிகமான ரூபாய் துரத்தும். இதற்குப் பணவீக்கம் என்று பெயர். பொருளாதாரம் மீள வேண்டும் என்றால், மக்கள் அதிகம் வாங்க வேண்டும்.


நுகர்வு பெருக வேண்டும். அதற்கு விலைகள் சகாயமாக இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், இதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவிடக் கூடாது.சர்வதேச நிலைமையை ஆராயும் போது, ஒரு விஷயம் தெளிவாகிறது. எண்ணெய் துரப்பணம் செய்யும், ‘ஓபெக்’ நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள இணக்கம் தற்காலிகமானது தான். அது அதிக காலம் நீடிக்க வாய்ப்பில்லை.


இரு ஆயுதங்கள்இரு தரப்பும் பிய்த்துக் கொண்டு, மீண்டும் பழையபடியே, கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்குமானால், அதன் விலை கணிசமாக குறையலாம். ஆனால், அது எவ்வளவு விரைவில் நடைபெறும் என்று யூகிக்க முடியவில்லை.அதனால், இப்போது நம்மிடம் இருக்கும் இரு ஆயுதங்கள், ஒன்று மத்திய அரசின் கலால் வரியைக் குறைப்பது; மற்றொன்று மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது.


ஒரு பக்கம் தேசத்துக்கும் பணம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், தனிநபர்களுக்கும் போதிய உற்பத்தியும், வாழ்வாதாரமும், வளமும் வேண்டும். மக்கள் சுபிட்சம் பெறத் தொடங்கினால், நாடும் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.மக்களை ஒட்ட ஒட்டக் கறக்காமல், நன்கு பால் சுரக்கவிட்டு, அவ்வப்போது கறப்பது ஒன்றே தேர்ந்த மாட்டுக்காரரின் கைவண்ணம். ஆவினங்களின் தேசத்தில் இருந்து வரும் பிரதமருக்கு இது நிச்சயம் புரியும்.


ஆர்.வெங்­க­டேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)