பதிவு செய்த நாள்
22 ஜூன்2020
01:14
பொதுவாக, வைப்பு நிதி பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்பதும் உறுதியாக தெரியும். ஆனால், எல்லா வகையான முதலீடுகளும் இடர் கொண்டவையே. முதலீட்டின் தன்மைக்கேற்ப இடரின் அளவு மட்டுமே வேறுபடும். அந்த வகையில், வைப்பு நிதி முதலீடு தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய இடர்கள்:
பணமாக்கம்:
தேவையான நேரத்தில் முதலீட்டை விலக்கி, பணமாக பெற்றுக் கொள்ளும் தன்மை முக்கியமானது. வைப்பு நிதியை எளிதாக பணமாக்கி கொள்ளலாம். ஆனால், முதிர்வு காலத்திற்கு முன் விலக்கி கொண்டால், வட்டி பலனுக்கு அபராதம் உண்டு. வரிச்சலுகைக்கான ஐந்தாண்டும் வைப்பு நிதி முதலீட்டை இடையே விலக்க முடியாது.
பாதுகாப்பு:
எந்த முதலீட்டிலும், அசல் மீதான பாதுகாப்பு முக்கியம். வைப்பு நிதியை பொறுத்தவரை, வங்கிகள் மீது நம்பிக்கை வைக்கலாம். ஆனால், எதிர்பாராத விதமாக வங்கிகள் திவாலானால், வைப்பு நிதி முதலீடு பாதிக்கப்படலாம். இது போன்ற நேரங்களில், 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு பாதுகாப்பு பொருந்தும்.
பணவீக்கம்:
வைப்பு நிதியில், முதலீடு காலம் முழுதும் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வருமானம் பெறலாம். ஆனால், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த பலன் குறையலாம். மேலும், வரி விதிப்பின் தாக்கத்தையும் சேர்த்துக் கொண்டால் இது இன்னும் அதிகமாகும்.
வட்டி விகிதம்:
வைப்பு நிதிகளில் வட்டி விகித இடர் உண்டு. குறைந்த வட்டி விகிதத்தில், நீண்ட காலத்திற்கு தொகையை முடக்கி வைக்க வேண்டியிருக்கலாம். குறிப்பாக ஐந்தாண்டு லாக் இன் காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு இது பொருந்தும். நிலையான வருமானம் நாடுபவர்களை இது பாதிக்கும்.
மறுமுதலீடு:
வட்டி விகிதம் குறையும் சூழலில், விரைவில் முதிர்வு பெறும் வைப்பு நிதி முதலீட்டை மறு முதலீடு செய்தால், குறைந்த வட்டி விகிதத்தில் புதுப்பிக்க வேண்டியிருக்கும். வைப்பு நிதிகளின் இந்த அம்சங்களையும் கருத்தில் கொண்டு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகளை தீர்மானிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|