பதிவு செய்த நாள்
22 ஜூன்2020
13:07
‘பணம் பண்ண வழி கேட்டால், உளவியல் பாடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறாரே இவர்...’ என்று உங்களுக்கு தோன்றினால், என் பதில் இது தான்: பணம் பண்ணுவது ஓர் உளவியல் வழிமுறை.உள்ளிருந்து செயல்பட்டால் தான், வெளியிலிருந்து பணம் வரும். பணம் பற்றி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், உங்கள் வாழ்வைப் பாதிக்கிறது. அதனால் தான், மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... செல்வம் சேர்ப்பதும், பராமரிப்பதும் உளவியல் திறன்கள்!
பாதிப்பு
வெறும் முதலீட்டு திட்டங்களை விற்கும் நிதி ஆலோசகர்கள், உங்களை பணக்காரர்கள் ஆக்க முடியாது. பணம் சம்பாதிக்க, சேர்க்க, பெருக்க உங்களுக்கு உதவுவது உங்கள் எண்ணங்கள் தான். அதனால், உங்கள் எண்ணங்களை செப்பனிடுவது தான் முதல் வேலை என்று சொல்கிறேன்.
இன்று கொரோனா பாதிப்பில் உலகமே பொருளாதார நெருக்கடி பற்றி அஞ்சி வருகிறது. பலர், வேலை மற்றும் தொழில் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடி, உளவியல் ரீதியிலும் நம்மை பாதிக்கிறது. நம் பாதிப்பை விட, நாம் கேட்கும் அடுத்தவர் பாதிப்புகளும், நம்மை நிஜம் போல பாதிக்கிறது. ஓர் உணர்வு நிலை மேலிடும்போது, அது அறிவுபூர்வமாக சிந்திக்கும் திறனை செயலிழக்க வைக்கிறது.
நெருக்கடி நிலையில், நம் மனம் சம நிலையை இழக்கிறது என்று தெரியும் பொழுது, பெரிய முடிவுகளை, நெருக்கடியான மன நிலையில் எடுக்காமல் இருப்பது நல்லது.
‘சென்டிமென்ட்’
இது கொரோனா காலத்திற்கு மட்டுமல்ல; எல்லா காலத்திற்கும் பொருந்தும். பயத்திலும் பதற்றத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை எதிர்காலத்தில் வருந்த வைக்கும். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், கையில் உள்ளதை எடுத்துக் கொண்டு ராத்திரி வேளையில் நகைக் கடைக்கு ஓடியவர்களில் பலர், நடுத்தர வர்க்கத்தினர் தான். ஒரு வங்கியைப் பற்றி தவறான செய்தி வந்தவுடன், எல்லா பணத்தையும் எடுக்க, ஏ.டி.எம்., ஓடியவர்களும் இவர்கள் தான். ரியல் எஸ்டேட் வீழ்கிறது என்றவுடன், அவசரமாய் நிலத்தை விற்று, வேறு இடத்தில் பணத்தை முதலீடு செய்ய தயாராகிக் கொண்டு இருக்கின்றனர்.
பலர் சேர்ந்து உணர்வு ரீதியாக செயல்படும் போது தான், பங்கு சந்தையோ, ரியல் எஸ்டேட்டோ பாதிக்கப்படுகிறது. இதை, ‘சென்டிமென்ட்’ என்பர். பொருளாதாரம் வீழ்கிறது என்று செய்தி வந்தவுடன், இந்த சென்டிமென்ட் பாதிக்கப்படுகிறது. விலைகள் குறைவது, தொழில் மந்தமாவது, பணப்பரிவர்த்தனை குறைதல் என சுழன்று சுழன்று சந்தை சரிய, இது போன்ற சென்டிமென்ட் முக்கிய காரணம்.
ஆனால், அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் வீழும் சந்தையில், எப்படி லாபம் பார்க்கலாம் என்று யோசிப்பர். குறைந்த விலையில் நிலம் கிடைக்கிறதா என்று பார்ப்பர்.
சிறந்த வழி
நெருக்கடி வரும் முன், பணத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வர். பொருளாதாரம் அதிகம் தாக்காத முதலீடுகளைப் பற்றி யோசிப்பர். கையிருப்பை அதிகப்படுத்துவர். சிக்கனத்தை கைப்பிடிப்பர். ஆனால், நெடுங்காலத்தில் நன்மை தரும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பர். முக்கியமாக, தடாலடி முடிவுகளை எடுக்க மாட்டார்கள். சிலர் தொழில் செய்யாமல், தள்ளி இருப்பர். தக்க தருணத்திற்கு காத்திருப்பர். அவசரப்பட்டு இருப்பதை இழக்க மாட்டார்கள். இந்த சூழலில், எதை சிறப்பாகச் செய்ய முடியும் என்று யோசிப்பர். குறுகிய கால நிவாரணத்திற்காக, நெடுங்கால நலனை புறந்தள்ள மாட்டார்கள்.
நான் சொல்வதெல்லாம் தொழிலதிபர்களுக்கு மட்டுமல்ல; சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும். மாதத் தவணை கடனை பிறகு கட்டிக்கொள்ளும் வசதி உள்ளது என்று நினைத்தால், அது பின்னால் அதிக வட்டி கட்ட நேரிட வைக்கும். செலவுகளை கடுமையாக குறைத்துக் கொண்டு, கடன் வாங்காமல் குடும்பம் நடத்துவது தான் சிறந்த வழி. வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கும் வழிகள் குறித்து யோசிப்பது, வீட்டில் சம்பாதிக்காதவர்கள் ஏதாவது சம்பாதிக்க வழியுண்டா என்று யோசிப்பது, வரும் பெரும் செலவுகளை தள்ளிப்போட பார்ப்பது என்று, மிகக் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
மனித சக்தி
சீனா சென்று வந்த நண்பர் சொன்னார்: வயதானவர்கள், வீட்டில் இருந்தே, தினசரி கூலிக்கு, சின்ன சின்ன உதிரி பாகங்கள் செய்து தருவது போன்ற வேலைகளை செய்கிறார்கள் என்று. இன்று மனித சக்தி வீட்டில் அடைபட்டுள்ள காலத்தில், வீட்டில் உள்ளோர்களை வைத்து, என்ன தொழில் செய்யலாம் என்று தொழிலதிபர்களும், வீட்டில் இருந்து வருமானம் பெருக்க என்ன வழி செய்யலாம் என்று தனி மனிதர்களும் சிந்தித்தால், நமக்கு சில புதிய எண்ணங்கள் கிடைக்கலாம்.
என்னிடம் உளவியல் ஆலோசனை பெறும் பலர் கேட்கும் கேள்வி, ‘வீட்டில் இருந்து கொண்டு சம்பாதிக்க என்னென்ன வழிகள் உள்ளன?’ என்பது தான்.உங்கள் வேலையை, தொழிலை பாதிக்காமல் அதிக வருமானம் தரும் வாய்ப்புகள் என்ன என்று சிந்திக்க ஆரம்பியுங்கள். குறிப்பாக, அதிக முதலீடு இல்லாமல் செய்யும் தொழிலாக அது இருக்கட்டும். இந்த சிந்தனைகளை இன்று செய்யாவிட்டால், பெரிய நெருக்கடிகள் வரும்போது, தவறான முடிவுகளை எடுக்கத் தள்ளப்படுவீர்கள்.
வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம் என்பதிலேயே உங்கள் எண்ணம் இருக்கட்டும். சில சின்ன நெருக்கடிகளை முன் கூட்டியே உணர்ந்து, சரியாக செயல்பட ஆரம்பித்தால், பெரிய நெருக்கடிகள் நமக்கு ஏற்படாமல் இருக்கும்!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|