பதிவு செய்த நாள்
27 ஜூன்2020
21:53
சான் பிரான்சிஸ்கோ:பிரபல ஐரோப்பிய நிறுவனம், விளம்பரங்களை நிறுத்திய காரணத்தால், பேஸ்புக், டுவிட்டர் பங்குகள் விலை சரிவைக் கண்டுள்ளன.
ஐரோப்பாவை சேர்ந்த, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான, யுனிலீவர், அமெரிக்க சமூக ஊடகங்களில் விளம்பரங்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில், விளம்பரங்களை குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க சமூக ஊடகங்களில், வெறுப்பை உமிழும் இடுகைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், யுனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.வரும் நவம்பர் மாதத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியதிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
யுனிலீவர் அறிவிப்பைத் தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றின் பங்குகள் விலை, 7 -– 8 சதவீதம் அளவுக்கு, கடந்த வெள்ளியன்று சரிவைக் கண்டன. பேஸ்புக் நிறுவனம் இதனால் அதன் சந்தை மதிப்பில், 5 ஆயிரம் கோடி டாலர், அதாவது இந்திய மதிப்பில், 3.78 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளது.ஏற்கனவே, ‘வெரிஸான்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், விளம்பரங்களை நிறுத்தியிருக்கும் நிலையில், தற்போது, நெதர்லாந்தை சேர்ந்த, யுனிலீவர் நிறுவனமும் விளம்பரங்கள் தருவதை நிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ‘கோக கோலா’ நிறுவனமும் குறைந்தபட்சம், 30 நாட்களுக்கு இந்த ஊடகங்களை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.யுனிலீவரின் இந்த முடிவு குறித்து, பேஸ்புக் இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.இது குறித்து டுவிட்டர் நிறுவனம், ’அவர்களின் இந்த முடிவை மதிக்கிறோம். மேலும் இந்த நேரத்தில் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி, தொடர்பில் இருப்போம்’ என தெரிவித்துள்ளது.
அண்மையில், அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில், ஜார்ஜ் ப்ளாயிட் என்பவர், போலீசாரல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, கருப்பின மக்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், அப்போது, தன் டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில், ‘போராட்டம் என்ற பெயரில், கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால், துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்’ என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை டுவிட்டர், தங்கள் தளத்தின் வரைமுறைக்கு எதிரானது எனக் கூறி நீக்கியது. ஆனால், பேஸ்புக் இதனை நீக்கவில்லை. இதனால், அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மீது விமர்சனங்கள் எழுந்தன.தற்போது, பேஸ்புக் நிறுவனம், ’நிறுவன விதிகளுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட யார் இடுகைகள் இட்டாலும், அதன் மீது கொடி உள்ளிட்ட தனி குறியீடு பதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.யுனிலீவர் அறிவிப்பைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம், அதன் சந்தை மதிப்பில், 3.78 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|