பதிவு செய்த நாள்
06 ஜூலை2020
10:12
நம் எண்ணங்கள் தான் நம் விதியாகிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். இதை அறிந்து முழுமையாக செயல்படுத்த துவங்கினால் மட்டுமே, நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை கொண்டு வர முடியும். நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் சக்தி, நம் எண்ணங்களுக்கு உண்டு என்றால், அதை எவ்வளவு தேர்ச்சியாக கையாள வேண்டும்? பயிர் செய்வதற்கு மேற்கொள்ளும் உழைப்பைப் போல, மனதில் சரியான எண்ணங்கள் விளைய, நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. பராமரிக்காத நிலத்தில் களைகள் விளைவது போல, பயிற்சி செய்யாத மனதில், எதிர்மறை எண்ணங்கள் ஆயிரக்கணக்கில் முளைக்கும்.
'எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ, அது தான் நடக்குது' என்று சொல்பவர்களை கேட்டிருப்பீர்கள். 'வேண்டுவது தான் கிடைக்கும் என்றால், வேண்டாதது எப்படி நடந்தது?' என்று நீங்கள் கேட்கலாம். இதை ஒரு உதாரணமாகப் பார்த்தால் தான் புரியும்.
பதட்டமாக உத்தரவு
கையில் கண்ணாடி கிண்ணத்தை துாக்கி வரும் குழந்தையைப் பார்த்து, 'ஏய் பாத்து... பத்திரம்... கீழே விழுந்து உடையப் போகுது...' எனக் கத்துவாள் அம்மா; குழந்தை, கிண்ணத்தை தவற விடும்.'நான் பத்திரம், பத்திரம்னு கத்தினேன்... சொன்னதைக் கேக்காமல் உடைச்சிட்டயே...' என்று விளக்கம் சொல்வாள் அம்மா.இதை பகுத்து ஆராய்ந்தால், அம்மாவின் குறிக்கோள், பிள்ளையின் பாதுகாப்பு மட்டும் தான் என்பது புரியும். ஆனால், கண்ணாடிப் பொருள் என்றதும் பயம் வர, கீழே விழுந்து உடைந்தால் காயமாகும் என்ற எண்ணம் மனதில் படமாக ஓடுகிறது. நடக்கக் கூடாது என்ற எண்ணத்தை, மனதில் படமாக ஓட்டுகிறாள் அம்மா. மனக் கண்ணில் கண்டதால், குரல் உயர்ந்து, பதட்டமாக உத்தரவு தருகிறாள். அந்த உத்தரவில், பத்திரப்படுத்தும் எண்ணத்தை விட, கீழே விழுந்து உடையும் அபாயம் தான், பலமாக பதிகிறது. இப்போது அந்த குழந்தை, அதை கற்பனை செய்கிறாள். கீழே விழுந்து உடைந்தால், அம்மாவிடம் திட்டும், அடியும் கிடைக்கும் என்ற கூடுதல் பயமும், குழந்தை மனதில் ஓடுகிறது. அந்த பயத்தில், தன் பிடியை அசாதாரணமாக இறுக்க, இருவரும் பயத்துடன் மனதில், 'நினைத்த' அந்த கண்ணாடி கிண்ணம் உடையும் சம்பவம், நிஜத்தில் நடந்தேறுகிறது.
மனச்சித்திரம்
இதை முழுக்க நிகழ்வித்தவள், தாய் தான். கடைசியில், 'உன்னால முடியாத வேலையை ஏன் செய்யறே? நான் சொல்றத எதையாவது ஒழுங்கா கேக்கறியா?' எனத் திட்டுவாள்.இப்போது புரிகிறதா அம்மா நினைத்தது தான் நடக்கிறது என்று! 'நடக்கக் கூடாது' என்பதை, மனதில் நிழல்படுத்தியது தான் இதற்குக் காரணம் என்பது, அவளுக்கு விளங்கவில்லை.
'செல்லக்குட்டி... இன்னொரு கையை, கிண்ணத்துக்கு கீழே வச்சு பிடிச்சுக்கோ, பத்திரம்...' என்று சொல்லி இருந்தால், கிண்ணமும் உடைந்திருக்காது; எப்படி அதைக் கையாள வேண்டும் என, குழந்தையும் கற்று அறிந்திருக்கும்.இதைப் புரிந்து கொண்டால், நம் எண்ணங்களையும், சொற்களையும், சரியாக தேர்ந்தெடுப்போம்.வாழ்வில் பல நேரங்களில் நடக்காத நிகழ்வுகளை நினைத்து, நாம் பயப்படுகிறோம். அது தரும் மனச் சித்திரங்களின் தாக்கத்தில், எதிர்மறையான எண்ணங்களால், சொற்களால் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் நிகழும் துயரங்களுக்கு காரணம், நம் எண்ணங்களும், சொற்களும், செயல்களும் தான் என்பதை, நாம் உணர்வதில்லை.
மாறாக, வெளி உலகை தொடர்ந்து துாற்றிக் கொண்டிருக்கிறோம்!பண விஷயத்தில், நம் பயங்கள் தான் நம்மை, பல தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது. நடக்காத பல சம்பவங்களை நாம் மனதில் ஓட்டிப் பார்த்து, அதன் விளைவாக வரும் எதிர்மறையான சொற்களையும், செயல்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.
சம நிலை முடிவு
'பயம் இருப்பது நல்லது; அது நம்மை தவறிழைக்க வைக்காது' என்ற ஒரு மதிப்பீடு உண்டு இங்கு. பயம் போனால், பேராசை வந்து விடும் என்பது தான் அந்த வாதம். பயமும் இல்லாமல், பேராசையும் இல்லாமல் எந்த உணர்வுகளின் பெரும் தாக்கமும் இல்லாமல், சம நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் தான், நமக்கு பெரும் நன்மை அளிப்பவை. எதிர்மறை உணர்வுகள் வரும்போது, அதை நேர்மறை எண்ணங்களாலும், சொற்களாலும் மாற்றி அமைத்துக் கொள்ளத் தான் பயிற்சி தேவைப்படுகிறது.
அதே போல, ஸ்திரமான குறிக்கோள்கள் என்றுமே நேர்மறை எண்ணங்கள் தான். அவை உள்ளபோது, எதிர்மறை எண்ணங்களின் வீரியம், என்றுமே குறைந்து காணப்படும். எந்த குறிக்கோளும் இல்லாத மனதில், எதிர்மறை எண்ணங்கள், ஒட்டடை போல பிடித்துக் கொள்ளும். பணம் பற்றிய குறிக்கோள்கள் வேண்டும் என்றால், அவை நேரடியாக இருக்க வேண்டும் என்றில்லை. மறைமுகமாகவும் இருக்கலாம். 'ஐந்து ஆண்டுக்குள், தொழிலை இரு மடங்காக வளர்க்க வேண்டும்;
பணி ஓய்விற்கு பிறகு வேலை செய்ய வேண்டும்; தோட்டத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்' என, எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவை, புறச் செய்திகளின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும்.உலக அளவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகும் என்றால், உடனே கலவரப்படத் தேவையில்லை. உங்கள் வேலை, தொழில், வருமானம் பற்றி உங்கள் குறிக்கோள்களை செதுக்கி, அவற்றை நோக்கி நகருங்கள்.
வாழ்வின் குறிக்கோள்கள்
முக்கியமாக புறச் செய்திகளுக்கு நேரம் இல்லாத அளவிற்கு, 'பிசி'யாக இருங்கள். பிடித்த எல்லா விஷயங்களையும் செய்யுங்கள்.- அவை வருமானத்துடன் நேரடியாக தொடர்பு இருக்கத் தேவையில்லை.நாம் நினைப்பது தான் நடக்கிறது என்று புரிவதால், உங்கள் எண்ணங்கள் பெரும்பாலும், உங்கள் வாழ்வின் குறிக்கோள்கள் பற்றியே இருக்கட்டும்.
நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, உங்கள் குறிக்கோள்களும், அதன் தொடர்பான செயல்பாடுகள் பற்றியே இருக்கட்டும். நிகழ்காலம் எவ்வளவு தேக்க காலமாக இருந்தாலும் சரி, வருங்காலம் பற்றிய எண்ணங்களும், சொற்களும், நேர்மறையாக இருந்தால் தான், அவை உங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு இட்டுச் செல்லும்!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|