பதிவு செய்த நாள்
07 ஜூலை2020
00:21
சீனப் பொருட்கள் புறக்கணிப்பு முடிவு, நம் நாட்டு மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு, கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 2017 –18 நிதியாண்டில், 41 ஆயிரத்து, 220 கோடி ரூபாயாக இருந்த, நம் நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி, 2018 – 19ல், 61 ஆயிரத்து, 908 கோடி ரூபாயாக உயர்ந்தது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில், தன்னிறைவு மட்டுமின்றி, ஏற்றுமதி செய்யவும், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இரண்டாம் இடம்
அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில், ஐந்தாண்டுகளில், ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை, இரண்டிலிருந்து, 60 ஆக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் தயாரிப்பில், நம் நாடு, உலகளவில் இரண்டாமிடம் வகிக்கிறது.வரும், 2025ம் ஆண்டுக்குள், ஸ்மார்ட் போன் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி, 10 லட்சம் கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், நேரடியாக ஐந்து லட்சம்; மறைமுகமாக 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
மின்னணு பொருட்கள் தயாரிப்பு தொடர்புடைய சலுகைகள் திட்டத்திற்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடந்த மாதம், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.சீனப் பொருட்கள் புறக்கணிப்பு முடிவு, நம் நாட்டு மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு, கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
டிஜிட்டல் உத்வேகம்
‘டிக் டாக்’ உட்பட, 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின், ‘ஷேர் சாட்’ செயலியை, 1.5 கோடி பேர், புதிதாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ‘ரோபோசோ’ வீடியோ செயலி, 7.5 கோடி எண்ணிக்கையில், பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல உள்நாட்டு செயலிகளின் பதிவேற்றம் சூடுபிடித்து உள்ளது.
டிஜிட்டல் துறையினர் கூறியதாவது:உலகத்தரம் வாய்ந்த, ‘மேட் இன் இந்தியா’ செயலி களை உருவாக்கும் வகையில், ‘தற்சார்பு இந்தியா செயலி புத்தாக்க சவால்’ திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதற்கு, நாடு முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் பொழுது போக்கை மட்டும் நோக்கமாக கொண்டிராமல், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நம் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் செயலிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|