பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
00:23
மும்பை:நாட்டில், தங்கத்துக்கான நுகர்வோர் தேவை, நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியிலும் குறைவாகவே இருக்கும் என, உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில், பொருளாதார செயல்பாட்டில் மந்தம், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வருமான குறைவு ஆகியவை காரணமாக, நுகர்வோர் தேவை குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அரசாங்கத்தின் கூடுதல் பொருளாதார சலுகைகள் மற்றும் பருவ மழை நன்றாக இருக்கும் என்ற கணிப்புகள் ஆகியவற்றால், பொருளாதார சரிவு ஓரளவு தடுக்கப்படும்.இந்திய பொருளாதாரம், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 11 ஆண்டுகளில் இல்லாத வகையில், 3.1 சதவீதமாக குறைந்தது.இந்நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 115 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி குறைப்பை அறிவித்தது.
ஆபரணங்கள், நீண்ட கால சேமிப்பு, போன்றவற்றுக்கான தங்கத்தின் தேவையானது, இந்த பொருளாதார சரிவால் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வாங்கும் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.திருமணம் மற்றும் பண்டிகை கால கொண்டாட்டம் ஆகியவை, சமூக இடைவெளியை பேண வேண்டிய கட்டாயத்தால், பொலிவிழக்கும்.இதுவும் தங்கத்தின் தேவையை பாதிக்கும்.
திருமண செலவுகள் மிச்சமாவதால், அந்த தொகை, சேமிப்புக்கு திரும்பலாம் என்றாலும் கூட, அது தங்கத்தில் மேற்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே.அடுத்த சில காலாண்டுகளுக்கு, மறுசுழற்சி மற்றும் தங்க கடன் ஆகியவை வளர்ச்சி அடையக்கூடும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|