பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
01:06
மும்பை:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 43வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, '5ஜி' தொழில்நுட்பத்தில், ஜியோவின் பங்கு, ஜியோ பிளாட்பார்மில், கூகுள் நிறுவனத்தின் முதலீடு, அராம்கோ நிறுவனத்தின் முதலீடு தாமதமாவது, பி.பி., நிறுவனத்துடனான ஒப்பந்தம், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.
கூகுள் முதலீடு
ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில், 33 ஆயிரத்து, 737 கோடி ரூபாயை முதலீடு செய்து, 7.7 சதவீத பங்குகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக, கூகுள் நிறுவனம், ரிலையன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.கூகுள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பேஸ்புக், 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய் முதலீடு செய்து, 9.9 சதவீத பங்குகளை பெற்றிருக்கும் நிலையில், தற்போது, கூகுளும் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முதலீட்டுடன், ஜியோவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீட்டு முயற்சிகள் முற்றுப் பெறுவதாக, முகேஷ் அம்பானி தெரிவித்தார்.கூகுளுக்கு, ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின், 7.7 சதவீத பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இதுவரை மொத்தம், 32.84 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த பங்குகள் விற்பனை மூலம், மொத்தம், 1.52 லட்சம் கோடி ரூபாயை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திரட்டி இருக்கிறது.
இதுவரை ஜியோவில், கடந்த, 12 வாரங்களில், மொத்தம், 13 நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றன.
கடன் இல்லை
ஜியோவில் செய்யப்பட்ட முதலீடுகள் தவிர, உரிமை பங்குகள் வெளியீட்டின் மூலம், 53 ஆயிரத்து, 124 கோடி ரூபாயை ரிலையன்ஸ் திரட்டி உள்ளது.ரிலையன்ஸ் எரிபொருள் சில்லரை விற்பனை நிலைய பிரிவில், பி.பி., நிறுவனம் அண்மையில், 7,629 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர கடன், 1.61 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இதுவரை, ரிலையன்ஸ் திரட்டி இருக்கும் மொத்த நிதி, 2.13 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதையடுத்து, கடனிலிருந்து விடுபட்ட நிறுவனமாக மாறி உள்ளது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
5ஜி தொழில்நுட்பம்
ஜியோ நிறுவனம் சொந்தமாக, 5ஜி தொழில்நுட்பத்தை, முழுமையாக வடிவமைத்து, உருவாக்கி இருப்பதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கிடைத்த பின், விரைவில் சோதனை முயற்சியில் இறங்க இருப்பதாகவும் தெரிவித்தார். ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வணிகப் பிரிவில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாக, முகேஷ் அம்பானி தெரிவித்தார். மேலும், அடுத்த சில காலாண்டுகளில், ரீட்டெய்ல் பிரிவில், உலகளவிலான பங்குதாரர்களையும், முதலீட்டாளர்களையும் சேர்க்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஜியோமார்ட் மூலம், சிறு கடைக்காரர்களை இணைத்து, மளிகை விற்பனை மாதிரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வீடுகளுக்கு வினியோகம் செய்வது, இதன் முக்கிய திட்டமாகும். ரிலையன்ஸ் ரீட்டெய்ல் தற்போது, காய்கறி மற்றும் பழங்களுக்கான அதன் தேவையில், 80 சதவீதத்தை, நேரடியாக விவசாயிகளிடமிருந்தே பெற்றுக் கொள்கிறது.
சவுதி அரோமாகொரோனா பரவல் காரணமாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எண்ணெய் --- ரசாயன வணிகத்தில், அரோமாவுக்கு பங்குகளை விற்பனை செய்து, 1.13 லட்சம் கோடி ரூபாயை பெற முடியாமல் தாமதமாவதாக, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஒப்பந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதா அல்லது புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, முகேஷ் அம்பானி தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.
கொரோனா தடுப்பூசிரிலையன்ஸ் நிறுவனம், தற்போது சந்தை மதிப்பில், இந்தியாவில் முதலிடத்திலும், உலகளவில், 60 பெரிய நிறுவனத்தில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மனைவி, நிடா அம்பானி, கொரோனாவுக்கு தடுப்பூசி வந்ததும், நிறுவனத்தின் டிஜிட்டல் வினியோக வசதிகளைப் பயன்படுத்தி, நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் அதை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இணைவோம் என, தெரிவித்தார்.
மேலும், தற்போது நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் முழு கவசம் மற்றும் முக கவசங்களை நிறுவனம் தயாரித்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|