பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
22:57
திருப்பூர்:ஏற்றுமதி வர்த்தகத்தில், சரிவு விகிதம் மாதந்தோறும் குறைந்து வருவது, ஆயத்த ஆடை துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, சர்வதேச அளவில், ஆயத்த ஆடை வர்த்தகம் முழுமையாக முடங்கியது.
இதன் எதிரொலியாக, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில், ஆடை வர்த்தகம் மீண்டும் துவங்கியுள்ளது. இதனால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவிலிருந்து மீண்டு எழத் துவங்கியுள்ளது.
கடந்த, 2019 – 20ம் நிதியாண்டின் ஜூன் மாதம், 8,560.93 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்தில், 6,083.70 கோடியாக, 28.94 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்., மாதம், 90.16 சதவீதமாக இருந்த ஆடை ஏற்றுமதி வர்த்தக சரிவு, மே மாதம், 63.34 சதவீதமாகவும்; ஜூன் மாதம், 28.94 சதவீதமாகவும், வர்த்தக சரிவு விகிதம், படிப்படியாக குறைந்து வருவது, ஆயத்த ஆடை துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘கொரோனாவால் முடங்கிய சர்வதேச ஆடை வர்த்தக சந்தை, படிப்படியாக இயக்கத்துக்கு வருகிறது. ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிலிருந்து, ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. ஏற்கனவே தயாரித்த ஆடைகளையும், வர்த்தகர்கள் பெறத் துவங்கியுள்ளனர். வர்த்தக சரிவுகள் முழுமையாக நீங்கி, விரைவில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|