பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
23:00
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பை விட, இறக்குமதி மதிப்பு குறைந்ததை அடுத்து, இது வரை நிலவி வந்த வர்த்தகப் பற்றாக்குறை, தற்போது வர்த்தக உபரியாக மாறியுள்ளது.
இதற்கிடையே, நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில், 10.24 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில், சேவைகள் துறை ஏற்றுமதி, 10.24 சதவீதம் அளவுக்கு குறைந்து, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், சேவைகள் துறை இறக்குமதியும் மதிப்பீட்டு மாதத்தில், 20.45 சதவீதம் சரிந்து, 75 ஆயிரத்து, 47 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த ஏப்ரல் – மே மாதத்தில், சேவைகள் துறை ஏற்றுமதி, 2.51 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி, 1.45 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, 45 நாட்கள் தாமத்துடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து நான்காவது மாதமாக, ஜூன் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு, பெட்ரோலியம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்துவிட்டது.
இருப்பினும், கடந்த, 18 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக, நாட்டின் வர்த்தகம் உபரி நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு, இறக்குமதியில், 47.59 சதவீதம் அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மதிப்பீட்டு மாதமான ஜூனில் ஏற்றுமதி, 12.41 சதவீதம் சரிவைக் கண்டு, 1.65 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது. இதற்கு, கொரோனா பரவலால் தேவைகள் குறைந்தது காரணமாகும்.
இறக்குமதியை பொறுத்தவரை, தொடர்ந்து நான்காவது மாதமாக சரிந்து உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், இறக்குமதி, 47.59 சதவீதம் குறைந்து, 1.59 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.இதையடுத்து, நாட்டில் வர்த்தகப் பற்றாக்குறை என்ற நிலை மாறி, உபரி, 6,000 கோடி ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|