பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
23:05
மும்பை:நாட்டில் உள்ள தங்க நகை சில்லரை விற்பனையாளர்கள், வர்த்தகத்தை அதிகரிக்க, ‘டிஜிட்டல்’ விற்பனை முறையையும் மேற்கொள்ள துவங்கி வருவதாக, உலக தங்க கவுன்சில், ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உலக தங்க கவுன்சில், ‘இந்தியாவில் ஆன்லைன் தங்க சந்தை’ எனும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, நிலைமைகள் தலைகீழாக மாறி இருக்கும் நிலையில், தங்க நகை சில்லரை விற்பனையாளர்கள், தங்களுடைய தற்போதைய வணிக மாதிரியை மறு மதிப்பீடு செய்யத் துவங்கி இருக்கின்றனர்.
இது குறித்து, உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:ஆன்லைன் மூலமாக தங்க நகை விற்பனை என்பது, மதிப்பின் அடிப்படையில், 1.2 சதவீதமாகத் தான் இருக்கிறது.
கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நகர்ப்புறத்தைச் சேர்ந்த, 17 சதவீதம் பேரும், கிராமப்புறத்தைச் சேர்ந்த, 3 சதவீதம் பேரும் மட்டுமே ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி இருக்கின்றனர்.இருப்பினும், ஆன்லைன் மூலமான நகை விற்பனையை, ஒரு வாய்ப்பாக கருதும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல கடைக்காரர்கள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது, கூடுதல் பலனை தரும் என கருதுகின்றனர்.
இருப்பினும், சில தடைகளும் இருக்கின்றன. ஆன்லைன் மூலம் வாங்க தகுதியான வாடிக்கையாளர் கூட, நகையை தொட்டு உணர்ந்து வாங்கவே விரும்புகின்றனர். அடுத்து, வாங்கிய பொருளை திருப்பிக் கொடுப்பது, விலை பிரச்னைகள், தங்கம் வாங்குவது; தங்கத்தில் முதலீடு செய்வது இவற்றுக்கான வித்தியாசங்களை புரிந்துகொள்வது என, பல தடைகள் நீடிக்கின்றன.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|