பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
01:56
தொடர்ச்சியாக அதிக பலன் அளித்து வருவது தங்கம் மீதான ஈர்ப்பை அதிகரித்து இருந்தாலும், தங்க முதலீடு என வரும் போது, சரியான உத்தியை பின்பற்ற வேண்டும்.
அண்மை காலத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் மனதில் தங்கம் அதிகம் மின்னத்துவங்கியுள்ளது. சர்வதேச சூழல், பொருளாதார போக்கு உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலையேற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மற்ற வகை முதலீடுகளை மிஞ்சும் வகையில் தங்கம், 40 சதவீத பலனை அளித்துள்ளது.
புத்தாயிரம் ஆண்டு வாக்கில் சரிவை சந்தித்த பின், 240 சதவீத பலனை அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட, 2008ம் ஆண்டில் கூட நல்ல பலனை அளித்துள்ளது.இந்நிலையில், தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
விலை போக்கு
கொரோனா உண்டாக்கியுள்ள நிச்சயமற்ற சூழல், அமெரிக்கா- – சீனா இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட காரணங்களால், குறுகிய கால ஏற்ற இறக்கத்தை மீறி, தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.இதனிடையே, தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்திருக்கும் நிலையில், தற்போது முதலீடு செய்வது ஏற்றதாக இருக்குமா எனும் கேள்வியும் பலரது மனதில் எழுந்துள்ளது. எனினும், விலை போக்கை மட்டுமே அடிப்படையாக கொண்டு, தங்க முதலீட்டை தீர்மானிக்க கூடாது என்கின்றனர். தங்கம், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக அமைவதோடு, பரவலாக்கத்திற்கும் உதவுகிறது. பொதுவாக ஒருவர் தன் முதலீடு தொகுப்பில், தங்கத்தை, 10 முதல், 15 சதவீதம் வரை கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தங்க பத்திரம்
மேலும், நகை வடிவில் தங்கம் வாங்குவது சிறந்த முதலீடு இல்லை என்றும் கருதப்படுகிறது. செய்கூலி, சேதாரம் போன்றவை அதன் மதிப்பை பாதிக்கிறது. எனவே, காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். தங்க மியூச்சுவல் பண்ட், தங்க சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம் என்றாலும், இதற்கு சரியான உத்தியை பின்பற்றுவது அவசியம். மொத்தமாக முதலீடு செய்வதை விட, படிப்படியாக முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.மியூச்சுவல் பண்ட்களில் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி., முறையையே தங்க முதலீட்டிலும் பின்பற்றலாம்.
மாதம் ஒரு தொகையை முதலீடு செய்வதன் மூலம், விலை போக்கு தொடர்பான சராசரி பலனை பெற முடியும். எஸ்.ஐ.பி., அணுகுமுறை தங்க மியூச்சுவல் பண்ட்களுக்கு ஏற்றதாக இருந்தாலும், அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்தில் இந்த முறையில் முதலீடு செய்ய முடியாது.எனவே, தங்க மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., துவக்கி, பின் அதிலிருந்து ஒரு தொகையை விலக்கி தங்க சேமிப்பு பத்திர வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.
பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க சேமிப்பு பத்திரங்களையும் வாங்கலாம். ஆனால், இதற்கு டிமெட் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், தங்கத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதையும் தவிர்ப்பதோடு, தற்போதைய சூழலில் கையில் ரொக்கம் வைத்திருப்பதும் அவசியம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|