பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
23:48
மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. காப்பீடு இருந்தால், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சிக்கல் இல்லாமல் எதிர் கொள்ளலாம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், கொரோனாவுக்காக என்று கொரோனா கவச், கொரோனா ரக்ஷக் ஆகிய இரண்டு பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:
ஏன் அவசியம்?
வழக்கமான மருத்துவ காப்பீடு பாலிசி, கொரோனா சிகிச்சைக்கும் பொருந்தும் என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், கொரோனா சிகிச்சைக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட செலவுகள் இதன் கீழ் வராது. எனவே, கொரோனா தொடர்பான பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்:
கொரோனா கவச் பாலிசி, கொரோனா தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கானது.
50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். தனிநபர் அல்லது குடும்ப பாலிசி பெறலாம். கொரோனா ரக்ஷக் பாலிசி, கொரோனா பாதித்து, குறைந்தது 72 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தால், காப்பீடு செய்த தொகையை அளிக்கிறது.
கட்டுப்பாடுகள்:
இரண்டு பாலிசிகளுமே குறைந்த காலத்திற்கான, ஒரு முறை பிரிமியம் கொண்ட, புதுப்பிக்கப்பட முடியாத பாலிசிகள். இவற்றின் காலம், 105 நாட்கள், 195 நாட்கள் மற்றும் 285 நாட்களாகும். வயது வரம்பு உண்டு. பதினெட்டு வயது முதல், 65 வயது உள்ளவர் பாலிசி எடுக்கலாம். பாலிசி எடுத்த 15 நாட்களுக்கு பிறகு கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.
கூடுதல் பாதுகாப்பு:
ஏற்கனவே மருத்துவ காப்பீடு இருந்தாலும், கொரோனா பாலிசி எடுத்துக்கொண்டால், விலக்கப்பட்ட செலவுகளும் பொருந்தும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு பெறலாம். கொரோனா கவச் பாலிசி, வீட்டில் பெறும் சிகிச்சைக்கும் பொருந்தும். கொரோனா ரக்ஷக் பாலிசி, மொத்தமாக காப்பீடு தொகை அளிக்கும்.
ஆன்லைன் வசதி:
கொரோனா பாலிசி பொதுவானது என்றாலும், காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்ப சில அம்சங்கள், நிபந்தனைகள் வேறுபடலாம். இவற்றை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் பாலிசி வாங்கும் வசதியை எல்லா நிறுவனங்களும் வழங்குவதில்லை. அனைத்து அம்சங்களையும் விசாரித்து அறிவது நல்லது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|