பதிவு செய்த நாள்
10 ஆக2020
04:07
கொரோனா சூழலில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றும் நிலை ஏற்பட்டு உள்ளது. வீடே அலுவலகமாக மாறியிருப்பதோடு, பலரும் அதிக நேரம் செலவிடும் இடமாகவும் வீடு அமைந்துள்ளது. இதன் தாக்கம் பல்வேறு துறைகளில் எதிரொலிக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் பிரதிபலிக்கத் துவங்கியிருக்கிறது.
வீடுவாங்குபவர் மத்தியிலான எதிர்பார்ப்பும் மாறியிருக்கிறது. இதன் விளைவாக, ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் புதிய போக்குகள் பற்றி பார்க்கலாம்:
புறநகரில் கவனம்:
வீட்டிலே இருந்து பணி புரியும் தேவை காரணமாக, புறநகர் பகுதி மற்றும் சிறிய நகரங்களில் குடியிருப்புகளை பலரும் நாடத்துவங்கியுள்ளனர். வீட்டில் இருந்தே பணியாற்ற வசதியாக, மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி வசதி:
வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்களில் பலரும், உடனடியாக குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நாடுகின்றனர் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்பு திட்டங்களையே விரும்புகின்றனர். குடியிருப்பு திட்டங்களை ஆன்லைனில் பார்த்து உறுதி செய்து கொள்கின்றனர்.
வடிவமைப்பு:
நிச்சயமற்ற பொருளாதார சூழல், வீடு வாங்கும் முடிவை பலரும் தள்ளி போடும் நிலையை உருவாக்கியிருந்தாலும், பலர் தற்போதைய சந்தையை வாய்ப்பாகவும் கருதுகின்றனர். அதே நேரத்தில், வீட்டில் இருந்தே பணியாற்ற ஏற்ற வடிவமைப்பு அம்சங்களையும் எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர்.
நகருக்கு வெளியே:
நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் வீடு வாங்குவதில் இருந்த தயக்கமும் நீங்கியுள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு எதிர்காலத்திலும் இருக்கும் எனும் நம்பிக்கையில், பலரும் அலுவலகத்தில் இருந்து வீடு தொலைவில் இருப்பதை ஒரு பிரச்னையாக கருதவில்லை.
பெரிய வீடு:
குடியிருப்பு திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பல்வேறு அம்சங்களில் பணி புரிவதற்கான வசதியும் முக்கியமாக அமைந்துள்ளது. பணி புரிய தனி இடம் ஒதுக்கக் கூடிய பெரிய வீட்டை வசதியுள்ளவர்கள் நாடுகின்றனர். மற்றவர்கள், கம்ப்யூட்டர் மேஜை அமைப்பதற்கான தனியிடமேனும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|