பதிவு செய்த நாள்
10 ஆக2020
04:14
குறைந்தபட்ச கையிருப்பு தொகையை பராமரிக்க தவறுவதால் அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க, ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கு மாறுவதை பரிசீலிக்கலாம்.
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச கையிருப்பு தொகையை பராமரிக்க வேண்டி யிருப்பது பலருக்கு சிக்கலாக அமைகிறது. நிதி பற்றாக்குறை அல்லது கவனக்குறைவு காரணமாக, குறைந்த பட்ச கையிருப்பு தொகையை வைத்திருக்க தவறினால், அபராதமும் விதிக்கப்படும்.கொரோனா முடக்கத்தை அடுத்து, ரிசர்வ் வங்கி அளித்த சலுகையால், ஜூன் மாதம் வரை, வங்கிகள் இதற்கான அபாரத தொகை வசூலிக்காமல் இருந்தன. சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இந்த மாதம் முதல் சில வங்கிகள், குறைந்த பட்ச கையிருப்பு தொகைக்கான அபராதத்தை மாற்றி அமைத்துள்ளன.
சில வங்கிகள், இந்த தொகைக்கான வரம்பையும் உயர்த்தியுள்ளன.கொரோனா சூழலில், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச கையிருப்பு தொகையை பராமரிப்பது பலருக்கு கடினமாக அமையலாம். இந்நிலையில், அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க விரும்புகிறவர்கள், இத்தகைய வரம்பு இல்லாத ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கு மாறும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
துவக்குவது எப்படி?
இந்த வகை சேமிப்பு கணக்கில் கையிருப்பு தொகை வரம்பு கிடையாது என்பதால், கையிருப்பு தொகை பூஜ்ஜியமாக இருந்தாலும் பிரச்னை இல்லை. பொதுவாக சம்பள சேமிப்பு கணக்கு இந்த வகையை சேர்ந்தது.தனிப்பட்ட தேவைக்காகவும், பூஜ்ஜியம் கையிருப்பு கணக்கை துவக்கி கொள்ளலாம். இது அடிப்படை சேமிப்பு கணக்காக அமைகிறது.
அனைவருக்கும் வங்கிச்சேவை எனும் நோக்கத்தை அடைவதற்கான இந்த வகை சேமிப்பு கணக்கு அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு கணக்கில் அடிப்படை வசதிகளே இருக்கும் என்றாலும், குறைந்த பட்ச கையிருப்பை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அபராதம் செலுத்தும் தேவையும் இல்லை.இந்திய குடிமகனாக இருக்கும், 18 வயதுக்கு மேல் ஆன எவரும் பூஜ்ஜியம் கையிருப்பு சேமிப்பு கணக்கை துவக்கலாம்.
கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்து, இந்த சேமிப்பு கணக்கு வசதியை பெறலாம். வழக்கமான சேமிப்பு கணக்கிற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் இந்த சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும் என்றாலும், இதற்கு என சில நிபந்தனைகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள் உண்டு
பூஜ்ஜியம் கையிருப்பு சேமிப்பு கணக்கை துவக்க விரும்பினால், அந்த வங்கியில் வழக்கமான சேமிப்பு கணக்கு வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால், அந்த சேமிப்பு கணக்கை மூடிவிட வேண்டும் என்றும் வங்கிகள் நிர்ப்பந்திக்கலாம்.
மேலும், பூஜ்ஜியம் கையிருப்பு கணக்கில் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு உண்டு. ஒரு நிதியாண்டில், பரிவர்த்தனை தொகை, 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அதே போல, 50 ஆயிரத்திற்கும் மேல் கையிருப்பு வைத்திருக்க முடியாது. பணம் விலக்கல் மற்றும் ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளிலும் கட்டுப்பாடுகள் உண்டு. காசோலை வசதியும் கிடையாது.
அடிப்படையான சேமிப்பு கணக்கு வசதியே போதும் என நினைப்பவர்கள், குறைந்த பட்ச கையிருப்பு தொகை சிக்கலை தவிர்க்க இந்த சேமிப்பு கணக்கு வசதியை நாடலாம். வங்கி பரிவர்த்தனை அளவை பரிசீலித்து, வழக்கமான வசதிகள் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு, இந்த சேமிப்பு கணக்கு ஏற்றதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|