பதிவு செய்த நாள்
12 ஆக2020
23:02
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நுகர்பொருட்கள் விற்பனை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
நுண்ணறிவு மற்றும் ஆலோசனை நிறுவனமான காந்தர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நுகர்பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.அதில், மற்ற துறைகள் எல்லாம் ஜூன் காலாண்டில் மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில், இத்துறை மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இக்காலாண்டில் நுகர்பொருட்கள் துறை, அளவின் அடிப்படையில், 4.3 சதவீதமும்; மதிப்பின் அடிப்படையில், 8.5 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில், மதிப்பின் அடிப்படையிலான வளர்ச்சி, 6.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மதிப்பீட்டு காலத்தில், தனிநபர் ஆரோக்கிய பிரிவு, 11.1 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. வீட்டு பராமரிப்பு பிரிவில், மேற்பரப்புகளை சுத்தம் செய்யும் பொருட்கள், சோப்புகள் போன்றவை, 4.6 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன.உணவு மற்றும் பானங்கள் பிரிவு, 3.7 சதவீதம் அளவுக்கு, ஓரளவு மிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதில் உணவு பொருட்கள், 5.7 சதவீதமாக வலுவான வளர்ச்சி பெற்றிருந்தாலும், பானங்கள் வளர்ச்சி, 19 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மொத்த விற்பனையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 38 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, காந்தர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் நீல்சன் நிறுவன அறிக்கையில், இதே காலாண்டில் இத்துறை, 17.1 சதவீத சரிவைக் கண்டிருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|