பதிவு செய்த நாள்
15 ஆக2020
22:39
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 10.21 சதவீதம் சரிந்துள்ளது. மேலும், வர்த்தகப் பற்றாக்குறை, 36 ஆயிரத்து, 225 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, 5வது மாதமாக சரிந்து வருகிறது. ஜூலையில் ஏற்றுமதி, 10.21 சதவீதம் அளவுக்கு சரிந்து உள்ளது.இந்த சரிவுக்கு முக்கிய காரணம், பெட்ரோலியம், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்துபோனதே ஆகும்.இருப்பினும், இதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், 12.41 சதவீதமாகவும்; மே மாதத்தில், 36.47 சதவீதமாகவும்; ஏப்ரல் மாதத்தில், 60.28 சதவீதமாகவும் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதத்தில், 18 ஆண்டுகளில் இல்லாத வகையில், வர்த்தக உபரி நிலை ஏற்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 31.97 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. தங்கத்தின் இறக்குமதி, 4.7 வளர்ச்சியை கண்டுள்ளது.கடந்த ஜூலையில், முக்கியமான பல பொருட்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளன. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்கள் வளர்ச்சி, மைனஸ் 51.54 சதவீதமாகவும்; நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் வளர்ச்சி, மைனஸ் 49.61 சதவீதமாகவும்; ஆயத்த ஆடைகள் வளர்ச்சி, மைனஸ் 22 சதவீதமாகவும் உள்ளன.
மாறாக, அரிசி, இரும்புத் தாது, எண்ணெய் வித்துக்கள், இறைச்சி, புண்ணாக்கு, பால் பொருட்கள், மருந்துகள், காபி, பொறியியல் பொருட்கள் ஆகியவை வளர்ச்சி கண்ட துறைகளாகும்.இறக்குமதியில் இயந்திரங்கள், மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாதவை, ரசாயனங்கள், மின்னணு பொருட்கள் ஆகியவை எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஏற்றுமதி, 30.21 சதவீதமாக குறைந்து உள்ளது. இதன் மதிப்பு, 5.62 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இறக்குமதியை பொறுத்தவரை, 46.7 சதவீதம் குறைந்து, 6.67 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.இக்காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.05 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|