பதிவு செய்த நாள்
16 ஆக2020
23:18
மருத்துவ காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படாமல் இருக்க, கோரிக்கை தீர்மானிக்கப்படும் விதம் தொடர்பான நிபந்தனைகளை அறிந்திருப்பது அவசியம்.
நிதி திட்டமிடலின் ஒரு பகுதியாக, போதுமான காப்பீடு வசதி பெறுவதன் அவசியம் தவறாமல் வலியுறுத்தப்படுகிறது. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு இரண்டுமே முக்கியம். மருத்துவ காப்பீட்டை பொருத்தவரை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை உண்டானால், மருத்துவச் செலவை பாலிசி மூலம், ‘கிளைம்’ செய்து பெறலாம்
பாலிசி தன்மைக்கேற்ப, காப்பீடு தொகையை, ‘கேஷ்லெஸ்’ முறையில் பெறலாம் அல்லது பணத்தை செலுத்திவிட்டு, பின்னர் காப்பீடு நிறுவனத்திடம் கோரிக்கை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.தற்போது, வழக்கமான பாலிசிகள் தவிர, கொரோனா பாதிப்புக் கான பிரத்யேக பாலிசிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு முறை பிரிமியம் கொண்ட இந்த பாலிசிகள், குறிப்பிட்ட காலத்திற்கு காப்பீடு அளிக்கின்றன.காப்பீடு பெற்றிருப்பது அவசியம் என்பதோடு, காப்பீடு தொடர்பான அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, காப்பீடு தொகை கோரிக்கை தொடர்பான நிபந்தனைகளை அறிந்திருப்பது அவசியம். காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படாமல் இருக்க இது உதவும்.
விலக்குகள் உண்டு
பொதுவாக பாலிசிகள் குறிப்பிட்ட வகை விலக்குகளை கொண்டிருக்கலாம். இத்தகைய விலக்குகள் காரணமாக, காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படலாம். உதாரணமாக, பெருந்தொற்று பாதிப்புக்கு காப்பீடு பொருந்தாது என பெரும்பாலான பாலிசிகளில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
எனவே, கொரோனா தொடர்பான பிரத்யேக பாலிசி பெறுவது நல்லது.வழக்கமான பாலிசியின் கீழ், கொரோனா சிகிச்சை பொருந்தும் என தற்போது தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களுக்கான செலவுகள் உள்ளிட்டவை பொருந்தும்பாலிசி பெறுவது அவசியம்.
அதே போல, எல்லா பாலிசிகளுக்கும் காத்திருப்பு காலம் உண்டு. காத்திருப்பு காலத்திற்குள் கோரிக்கை சமர்ப்பித்தால், அது ஏற்கப்பட வாய்ப்பில்லை. பொதுவாக, முன்னரே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் பொருந்தும்.மேலும், பாலிசிதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாட்டிற்கு பயணம் செய்திருந்தால், அதன் காரணமாக கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
காத்திருப்பு காலம் முடிந்த பிறகே கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.பாலிசிதாரர், சமீப மாத காலத்தில் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்னை உள்ளவராக இருந்தால், அதன் காரணமாக கோரிக்கை நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பாலிசி பெறும் முன், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்து, அதன்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
தவறான தகவல்கள்
அதேபோல, குறிப்பிட்ட கால அளவுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால் மட்டுமே கோரிக்கை ஏற்கப்படும் என்ற நிபந்தனையும், கொரோனா தொடர்பான பாலிசிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பாலிசி பெறும் போது, சமர்ப்பிக்கும் தகவல்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால் அதன் காரணமாகவே கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
எனவே, விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, சரியான தகவல்களையே தெரிவிக்க வேண்டும்; தகவல்களை மறைப்பதையும் தவிர்க்க வேண்டும்.எனவே, பாலிசிக்கு விண்ணப்பிக்கும் முன், தொடர்புடைய அம்சங்கள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்துப் பார்த்து புரிந்து கொள்வதும் அவசியம். பாலிசிதாரர் தன் தேவைக்கேற்ற சரியான பாலிசியை தேர்வு செய்யவும் இது உதவும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|