பதிவு செய்த நாள்
18 ஆக2020
09:59
நாட்டின் வளர்ச்சியில், வருமான வரி, முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில், ஒன்றரை கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். நாடு முழுவதும், வருமான வரி வசூலிக்கும் பொறுப்பு, நேரடி வரிகளின் மத்திய வாரியத்திடம் (Central board of direct taxes) உள்ளது. 1924ம் ஆண்டு மத்திய வருவாய் சட்டத்தின்படி, மறைமுக மற்றும் நேரடி வரியை, ஒரு வாரியமே வசூலித்து வந்தது. 1964ம் ஆண்டில், இவை இரண்டாக பிரிந்தன.நேரடி வரிகளுக்கு ஒரு வாரியமும், மறைமுக வரிகளுக்கு தனி வாரியமும் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், மத்திய அரசு துறைகளில், மற்ற துறைகளை விட, வருமான வரித்துறை அதிகளவிலான மாற்றங்கள் கண்டு வருகிறது. அதில், கம்ப்யூட்டர் மயம், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற, புதிய வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது வருமான வரித்துறையில், வெளிப்படையான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக மேலும் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஒரு பகுதியாக, ‘முகமற்ற மதிப்பீடு’ (Faceless assessment) என்ற புதிய திட்டத்தை, பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு – நேர்மையாளரை கவுரவிப்பது’ என்பதே அதன் நோக்கம். ‘முகமற்ற மதிப்பீடு’ நடைமுறையின்படி, இனிமேல், வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது ‘மதிப்பீட்டு அதிகாரி’ யார் என்று தெரியாது. அதேபோல், தன் அதிகார வரம்பு எது என்பதும், வருமான வரி அலுவலருக்கு தெரியாது. இதே வழியில்தான் அப்பீலும் இருக்கும். இதன்படி, ஒரு தனிநபர், ஒரு நிறுவனத்தின் வருமான வரி ரிட்டர்ன், நாட்டின் எந்தப்பகுதியில் இருக்கும் ஒரு வருமான வரி அதிகாரிக்கும் ஒதுக்கப்படும். நமது கணக்கை எந்த அதிகாரி சரி பார்க்கிறார் என்ற அடையாளம், வரிதாரருக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது. இந்த ‘முகமற்ற மதிப்பீடு’ பணிகள், தானியங்கி கம்ப்யூட்டர் சேவை வாயிலாக, ரேண்டம் ஆக, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்படும். இதற்கு, எல்லை வரம்பு எதுவும் இல்லை.
மூன்று முகங்கள்
‘முகமற்ற மதிப்பீடு’ பணிகள் எப்படி நடக்கும் என்றால், அதை கவனிக்க மூன்று பிரிவு வரித்துறை அதிகாரிகள் இருப்பர். ஒரு வரிதாரரின் ஐ.டி.ஆர்., (ரிட்டர்ன்) முதலில் சென்று சேரும் அதிகாரி குழு கேள்விகள் எழுப்புவர். அடுத்த குழு, ‘டிராப்ட் அசசஸ்’ செய்வர். மூன்றாமவர் குழு, முதலில் செய்த இருவரின் பணிகள் சரிதானா? என ‘ரிவ்யூ’ செய்வர். பின், அசசஸ்மென்ட் அனுமதிக்கப்படும். ஒரு வரிதாரரின் ‘முகமற்ற மதிப்பீட்டை’ கவனிக்கும் இந்த மூவர் குழுக்களும், ஒரே ஊரில், ஒரே அலுவலகத்தில், ஒரே நபராக இருக்க மாட்டார்கள்.அனைத்து தகவல் பரிவர்த்தனைகளும் சம்பந்தப்பட்ட வரிதாரருடன் கம்ப்யூட்டர் வாயிலாக மட்டுமே நடக்கும். யாரையும், யாரும் சென்று நேரில் பார்க்க முடியாது. ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. கடுமையான நிதி மோசடிகள், சர்வதேச வரிவிதிப்பு, கறுப்பு பணம், பினாமி போன்றவற்றில் ‘முகமற்ற மதிப்பீடு’ முறை இருக்காது. சம்பந்தப்பட்டவர், வருமான வரி அதிகாரிகள் முன் நேரில் தான் ஆஜராகி விசாரணையை சந்திக்க வேண்டும்.
சர்வே மற்றும் ரெய்டு
வருமான வரிச் சட்டப்பிரிவு ‘133ஏ’ன் கீழ் வர்த்தக நிறுவனங்களில், சர்வே, தற்போது அதிகார வரம்பில் இருக்கும் வருமான வரி அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. இனிமேல் இது ‘ரெய்டு’ நடத்தும் புலனாய்வு துறையின் கீழ் செயல்படும். மேலும், சர்வே மற்றும் ரெய்டு, டி.டி.எஸ்., சர்வே நடத்த புலனாய்வு டைரக்டர் ஜெனரல் அல்லது முதன்மை ஆணையர் அனுமதி தேவைப்படும். சர்வே என்பது வியாபார இடங்களில் அதிகாரிகள் நுழைந்து சரி பார்ப்பது. ரெய்டு என்பது, வியாபார இடம், வீடு மற்ற எந்த இடத்திலும் செல்ல அங்கீகாரம் பெற்றிருப்பது ஆகும்.
கண்ணியம் காக்கப்படும்
முகமற்ற மதிப்பீட்டை தொடர்ந்து, வரி செலுத்துவோரின் உரிமைகள், கடமைகள் அடங்கிய ’வரிசெலுத்துவோர் சாசனம்’ (Taxpayer charter) உருவாக்கப்பட்டுள்ளது. இது, வருமான வரி அதிகாரிகளின், 14 பொறுப்புகளையும், வரிதாரர்களின், 6 கடமைகளையும் வலியுறுத்தி உள்ளது. உரிய வரியை செலுத்துதல் கடமையாகக்கூறப்பட்ட நிலையில், அதிகாரிகளின் பொறுப்பில், ஒரு வரிதாரர் குற்றவாளிபோல் கருதப்படக்கூடாது. அவரின் கண்ணியம் காக்கப்படவேண்டும். அவரின் தன்மானத்துக்கு இழுக்கு சேர்ப்பது போல் நடக்கக் கூடாது. அது இயற்கைக்கும், நீதிக்கும் முரணானது என்கிறது சாசனம்.
காத்திருக்கும் சவால்கள்
‘முகமற்ற வரிமதிப்பீடு’ வாயிலாக, வரிதாரருக்கு தனது மதிப்பீட்டு அதிகாரி யார்? எங்கிருக்கிறார் என்பதே தெரியாது. கோவை அல்லது திருப்பூரில் தாக்கல் செய்யப்படும் ஒரு டாக்ஸ் ரிட்டர்னை, கான்பூரில் இருக்கும் அதிகாரி குழுவுக்கு, கம்ப்யூட்டர் பணி ஒதுக்கீடு செய்யும். நாக்பூரில் உள்ள குழு வரைவு மதிப்பீடு செய்வர். இன்னொரு அலுவலகத்தில் மதிப்பீட்டு ஆணை வழங்கப்படும். அதேபோல், ‘முகமற்ற இ அப்பீல்’ கூட இதே பாணியில் தான் போகும்.இதனால், ஒரு வரிதாரர், தனது தரப்பு நியாயத்தை சொல்ல, யாரை நேரில் தொடர்பு கொள்வது என்று திண்டாடுவார். சிறு வணிகர்கள், அதிகாரிகளை பார்த்து நேரில் முறையிட்டால், மனிதாபிமான முறையில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவர். அதற்கு இப்போது வழியில்லை. பல சந்தர்ப்பங்களில், நேரில் சென்று கணக்கு கொடுத்தாலே, பல அதிகாரிகளை சமாதானப்படுத்த வரிதாரர்களால் முடிவதில்லை.இதுபோல, நமது நாட்டில், ஊர், ஊருக்கு வியாபார பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், மொழி வேறுபாடு, இ–மெயில் வாயிலாக சொல்லி புரிய வைப்பது போன்ற ஆரம்ப கால சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திருப்பூர் வியாபார தன்மை, கான்பூர் அதிகாரிக்கு புரிந்திருக்க நியாயமில்லை. இதனால், முதல் இரு ஆண்டுகள், அப்பீல்கள் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. செப்., 25ம் தேதியில் இருந்து ‘முகமற்ற இ அப்பீல்’ அமலுக்கு வரும். இப்படி பல்வேறு சவால்கள் வருமான வரித்துறைக்கும், வரிதாரர்களுக்கும் காத்திருக்கின்றன. ஆனால், மத்திய அரசின் நோக்கம் நல்லது. நீண்ட காலத்தில் இது வரிதாரர்களுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
தொடரும் மாற்றங்கள்
வருமான வரித்துறையில், ‘டாக்ஸ் கிரிடிட் ஸ்டேட்மென்ட்’ என்று சொல்லப்படும் ‘படிவம் 26 ஏஎஸ்’ மீது சமீபத்தில் தான் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆதார், பான் கார்டு, கிரடிட் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், ஒரு வரிதாரரின் விலை உயர்ந்த செலவுகள் தானாகவே, ‘படிவம் 26 ஏஎஸ்’ல் பதிவாகும். கிட்டத்தட்ட, 24 முக்கிய வகை பரிவர்த்தனைகள் வரித்துறையின் கவனத்துக்கு செல்லும். ஆதலால், வரிக்குட்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒருவர் இனி எளிதில் தப்ப முடியாது. அதேசமயம் ஒளிவு மறைவின்றி வரி செலுத்துவதில் நேர்மை கடைபிடித்தால், கவுரவமும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
– தொழில் சுகம் தொடரும்...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|