பதிவு செய்த நாள்
24 ஆக2020
21:29
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த பல வங்கிகள், நடப்பு நிதியாண்டில், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பங்குகள் விற்பனையில் இறங்கும் என தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள், தங்களுடைய பங்குகளை, நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொள்ள இருக்கின்றன. இவை தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பங்குகளை விற்பனை செய்ய இருக்கின்றன.
வங்கிகள், இரண்டாவது காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை இறுதி செய்த பிறகு, தங்களுடைய பங்குகளை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து, நிதியை திரட்டும் என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், வங்கிகள் தங்களது வாராக் கடன் மற்றும் ஒரு முறை கடன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடும்.இந்த இடைப்பட்ட காலத்துக்குள், பங்குகளை எப்போது விற்பனை செய்வது, யார் மூலமாக இந்த பணிகளை நிர்வகிப்பது என்பது போன்ற விஷயங்களையும் முடிவு செய்துவிடும்.
நான்கிலிருந்து ஐந்து வங்கிகள், மூன்றாம் காலாண்டு இறுதியிலோ, அல்லது கடைசி காலாண்டிலோ இந்த முயற்சிகளில் இறங்கும்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி, நான்காவது காலாண்டில், மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களில், தனியார் துறையை சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி ஆகியவை, தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மூலம் தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுத்துறையை சேர்ந்த பல வங்கிகள், மூலதனத்தை திரட்டிக்கொள்வதற்கான அனுமதியை, தங்களுடைய பங்குதாரர்களிடம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ளன. எஸ்.பி.ஐ., 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும், பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்கு விற்பனை மூலம் மட்டுமே 7 ஆயிரம் ரூபாய் திரட்டவும் அனுமதி வாங்கியுள்ளன.பேங்க் ஆப் பரோடா, 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், யூனியன் வங்கி 6,800 ரூபாய்க்கும் அனுமதி வாங்கி உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசை அணுக தேவையில்லை
வங்கிக்கு தேவையான மூலதனத்தை திரட்ட, அரசை அணுக வேண்டிய தேவை இல்லை என, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். மல்லிகார்ஜுனா ராவ் தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வங்கி, சந்தையிலிருந்தே தேவையான மூலதனத்தை திரட்டிக் கொள்ளும். அரசை அணுக வேண்டிய தேவை இல்லை.
ஏற்கனவே, 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனத்தை திரட்டிக் கொள்ள, பங்குதாரர்களின் அனுமதியை வங்கி பெற்றுள்ளது. இதில், பங்குகளின் மூலமாக மட்டும், 7 ஆயிரம் கோடி திரட்டப்பட உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியின், 85.5 சதவீத பங்குகள், அரசின் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|