பதிவு செய்த நாள்
07 செப்2020
02:02
வானிலை கணிப்புகளைப் போலத் தான், சர்வதேச சந்தையில், பெட்ரோல் – டீசல் விலை, தங்கம் விலை மற்றும் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கம் போன்றவற்றை கணிப்பதும். அதன் போக்கை, துல்லியமாக கணிக்க முடியாது. ஒன்றின் விலை ஏறும்போது, மற்றொன்றின் விலை இறங்குவது வாடிக்கை.
உலகில் பெரும்பான்மை யான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது. ஒரு நாடு, அதிகப்படியாக கரன்சி அச்சடித்து புழக்கத்தில் விடும்போது, அந்த நாட்டில், பணவீக்கம் அதிகரிக்கும். அப்போது டாலருக்கு நிகரான கரன்சியின் மதிப்பு சரியும்.
இதுதான், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளில் நடைபெறும் அமெரிக்க டாலருக்கு எதிரான
பொருளாதார மேஜிக்.
அமெரிக்காவில் அப்படி அல்ல. தேவைக்கு ஏற்ப, கரன்சி அச்சடித்து புழக்கத்தில் விட்டாலும், அங்கு பெரிய அளவில் பணவீக்கம் ஏற்படுவதுஇல்லை; அதன் டாலர் மதிப்பும் சரிந்ததில்லை.
கூடுதல் கரன்சி அச்சடித்து விடுவதால் ஏற்படும் பணவீக்கத்தை, மற்ற நாடுகள் மீது அமெரிக்கா சுமத்துகிறது எனக் கூறப்படுவதுண்டு.3 டிரில்லியன் டாலர் தன் குடிமக்களுக்கு, ‘கோவிட் – 19’ நிவாரணம் வழங்குவதற்காக, அமெரிக்கா, இந்திய மதிப்பில், 225 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையிலும், அமெரிக்க டாலரின் மதிப்பு, இந்திய ரூபாய்க்கு நிகராக, 76 ரூபாய் என்று அதிகரித்தது. இதை, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தன. ஏனெனில் அவை,
இறக்குமதியை அமெரிக்க டாலரில் தான் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கேற்ப அன்னிய செலாவணியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டுமே என்ற கவலை. இந்த பரபரப்பான எதிர்பார்ப்பில், அமெரிக்க டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில், சரேலென, 72 ரூபாய்க்கு குறைந்திருக்கிறது. இது மேலும் குறையவே வாய்ப்பு இருக்கிறது என்கிற கணிப்பும் உலா வருகிறது.
டாலரும், தங்கமும்
பொதுவாக, டாலர் மதிப்பு உயரும்போது, தங்கத்தின் மதிப்பு குறையும். டாலர் மதிப்பு சரியும்போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும்.ஆனால் கொரோனா காலத்தில், டாலர் மதிப்பும், தங்கம் விலையும் ஒரே அளவு அதிகரித்தது. அதற்கு ஒரு பின்னணி உண்டு. தற்போது, பெரிய அளவில், தங்க உற்பத்தியாளராக, அமெரிக்கா இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை இருப்பு வைத்திருக்கிறது. இதனால், சர்வதேச தங்கம் விலையை தீர்மானிக்கும் சக்தியாகவும் அமெரிக்கா உள்ளது.
அமெரிக்க டாலர், உலகை வளைத்தது எப்படி?
அமெரிக்க விடுதலைப் போராட்டத்துக்காக, 1775ல், ‘புரட்சி போர்’ நடந்தபோது, ‘கான்டினன்டல் காங்கிரஸ்’ அமைப்பு, ‘கான்டினன்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு
ஏற்பட்ட பல மாற்றங்களுக்குப் பிறகு, ஜூலை, 6, 1785ல், ‘யு.எஸ்., டாலர்’ ஆக பெயர் மாற்றம் பெற்று, புழக்கத்துக்கு வந்தது.இரண்டாம் உலகப் போர், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது; ஆனால் அமெரிக்கா தப்பியது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் வசமிருந்த தங்கத்தை அமெரிக்காவிடம் வழங்கி, போருக்கான
ஆயுதங்களை வாங்கின. இதன் காரணமாக, அமெரிக்காவிடம் தங்கம் குவிந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து, 1944ல், அமெரிக்காவில் நடத்திய,
‘ப்ரெட்டன் வூட்ஸ்’ மாநாட்டில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி, அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு, 28.3 கிராம் கொண்ட 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை, 35 டாலர் என மதிப்பிடப்பட்டது.
மற்ற நாடுகள், அமெரிக்க டாலரை அடிப்படை யாக கொண்டு, தங்கள் நாட்டு கரன்சியின் மதிப்பை முடிவு செய்தன. ஐ.எம்.எப்., உருவாகக் காரணமாக இருந்ததும், இந்த மாநாடு தான். அதன் பிறகு, தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலரின் மதிப்பு மீது, உலக நாடுகள் கவனம் செலுத்த துவங்கின; அதுவரை, தங்கமே முதன்மையாக இருந்தது.அதன்பிறகு, உலக நாடுகள், தங்களிடம் இருந்த தங்கத்தை அமெரிக்காவிடம் கொடுத்து, டாலரை பெற்றுக் கொண்டிருந்தன.
கடந்த, 1971ல், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், தங்கத்துக்கு நிகராக, ‘டாலர் எக்ஸ்சேஞ்ச்’ தரும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது புழக்கத்தில் இருக்கும், ‘விர்ச்சுவல்’ கரன்சியான, ‘கிரிப்டோ’வை, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரியும்.
புது நோட்டால் பிரச்னை
கடந்த, 2008ம் ஆண்டுக்குப் பிறகு, டாலர் மதிப்பை அதிகரிக்க, அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளால், தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், தற்போது நிலைமை மாறி விட்டது. அமெரிக்க அதிபர், கரன்சிகளை அச்சடித்து குவிக்கும் நடவடிக்கைகள், அமெரிக்காவின் பொருளா தாரத்தை பாதிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
கோவிட் – 19 நிவாரணத்திற்காக, 3 டிரில்லியன் டாலர் வினியோகித்த அமெரிக்க அரசாங்கம், வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக, மேலும் 1 டிரில்லியன் டாலர் மதிப்பில் வினியோகிக்கவும் தீர்மானித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது விரைவில், டாலர் மதிப்பை குறைத்து பாதிப்பை ஏற்படுத்தும். தங்கத்தின் மதிப்புஅதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய செலாவணி
தற்போது அமெரிக்க டாலர் விலை ஏற்ற, இறக்கங்களை பொருத்தே இந்திய பொருளாதாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ இருக்கின்றன. நாட்டின், ஏற்றுமதி – இறக்குமதிக்கு அன்னிய செலாவணியே அடிப்படை. ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாய், அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு போர்ட் போலியோ முதலீடு, வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணம் போன்றவற்றின் வாயிலாகவே, நாட்டின் அன்னிய செலாவணி நிலவரம் கணிக்கப்படுகிறது.அதேபோல, கச்சா எண்ணெய் இறக்குமதி, புதிய திட்டங்களுக்கான இயந்திரங்கள் வாங்குவது, திரும்பப் பெறப்படும் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீடு போன்றவற்றுக்காக செலவிடும் டாலர்களும் அன்னிய செலாவணியை பாதிக்கும்.
இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி தான், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பைக் குறிக்கிறது. கடந்த, 1991ம் ஆண்டு கிட்டத்தட்ட மைனசில் இருந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தற்போது, 540 மில்லியன் டாலர் அளவில் உள்ளது.
இதுவே சீனாவின் தற்போதைய கையிருப்பு, 3 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது.
சீனாவில் குவித்திருக்கும் முதலீடுகளையே, இந்தியாவிற்கு மாற்றுவதற்கு உலக நாடுகள் நினைக்கும் வேளையில், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீடுகள் நம்மை விட்டுச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
கை கொடுக்கணும்
உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பிற்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்போது, அது நிச்சயம் நம் நாட்டிற்கு கம்பீரத்தை அளிக்கும். கொரோனா காரணமாக, சீனாவின் மீதான உலக நாடுகளின் வெறுப்பால், தற்போதைக்கு இந்தியாவிற்கு, பல துறை உற்பத்தி பொருள்கள் சேவைகளின் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளே பிரகாசமாக காணப்படுகின்றன.
கச்சா எண்ணெய், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருள் தவிர, இறக்குமதிக்கான அவசியம் தற்போது எழவில்லை. இதனால், டாலர் விலை குறைவது, பெரிய பலனை அளிக்காது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின், தற்சார்பு பொருளாதார ஆர்வமும், ஆக்கமும் நாட்டில் வேகமெடுத்திருப்பதால், அவசியமற்ற பொருட்களின் இறக்குமதி இனி தவிர்க்கப்படும்.
அன்னிய செலாவணி பயன்படுத்துவது கட்டுக்குள் வரும். ஆகவே, அமெரிக்காவின் டாலர் அச்சடிப்பு என்ற புதிய ஆட்டத்தால், இந்தியாவில் டாலர் விலை சரியாமல் காப்பாற்றி,
இந்திய ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் பாதிக்காத வகையில் தாங்கிப் பிடிக்க வேண்டிய
கட்டாயம், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.டாலர் என்ன மாயம் செய்தாலும், அதன் லகான் மோடி அரசின் கைகளில் இருப்பதே, நமக்கான நம்பிக்கை.
தங்கம் இறக்குமதி சரிவு
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் தங்கம் இறக்குமதி பெரிய சரிவை சந்தித்துள்ளது. தற்போது இந்தியா, 633.1 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறது.அதேபோல, கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது. இதனால், அன்னிய செலாவணியில் திருப்திகரமான கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 40 லட்சம் கோடியாக உள்ளது. இதை வைத்து, 13 மாதங்களுக்கான இறக்குமதியை சமாளிக்க முடியும்.
ஆடிட்டர்
ஜி.கார்த்திகேயன்
karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|