பதிவு செய்த நாள்
08 செப்2020
01:10
புதுடில்லி:வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெயர், 'வீ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைதொடர்பு நிறுவனங்களான, வோடபோன் மற்றும், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள், கடந்த 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிணைந்து, 'வோடபோன் ஐடியா' என மாறியது.
தற்போது, இரண்டு ஆண்டுகள் கழித்து, நிறுவனத்தின் பெயர்,'வீ 'என மாற்றம் செய்யப் பட்டு 2உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.கடந்த சில காலமாக, சந்தையில் கடுமையான போட்டிகள் காரணமாக, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக இழந்து வருகிறது வோடபோன் ஐடியா.
மேலும், சீர் செய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பாக அரசுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்திருக்கிறது இந்நிறுவனம்.கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், இந்நிறுவனம், 25 ஆயிரத்து, 460 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனம், 4,874 கோடி ரூபாய் இழப்பை மட்டுமே சந்தித்திருந்தது.
நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் கடுமையான இழப்பு ஏற்பட்டதற்கு காரணம், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகைக்கு, நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது தான். இந்நிலையில், தொலைதொடர்பு நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள தொகையை செலுத்த, 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து, கடந்த 1ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் ஓரளவு மூச்சுவிடும் நிலையை எட்டியது வோடபோன் ஐடியா. தற்போது, இதன் தொடர்ச்சியாக பிராண்டு பெயரை, 'வீ' என மாற்றம் செய்து புது அவதாரம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, ஜூன் மாத நிலவரப்படி, 28 கோடி ஆகும். இதுவே, இரு நிறுவனங்களின் இணைப்பின் போது, எண்ணிக்கை 40.8 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரிந்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, அதிகரித்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டி, அடுத்த கட்டமாக, 5ஜி தொழில்நுட்பத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் என பல சவால்கள் உள்ளன.இந்நிலையில், பெயர் மாற்றம் மற்றும், 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது ஆகிய முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.
சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், லட்சக்கணக்கான மக்களுடன், டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த விரும்பும் அரசின் எண்ணம் நிறைவேற, புதிய பிராண்டான, 'வீ' துணை நிற்கும்.
குமார் மங்கலம் பிர்லா,
தலைவர், வோடபோன் ஐடியா
கட்டண உயர்வு
கட்டண உயர்வு குறித்து நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்து, நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தக்கர் கூறியதாவது:நிலுவை தொகையை செலுத்த, உச்ச நீதிமன்றம், 10 ஆண்டு அவகாசம் வழங்கி இருப்பது நல்ல முடிவாகும். ஆனால், நிறுவனம் நீடித்து நிலைப்பதற்கும், வருமானம் கிடப்பதற்கும் கட்டண உயர்வு கண்டிப்பாக தேவை.
சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக, நுகர்வோர் கூடுதல் கட்டணங்களை செலுத்த தயாராக உள்ளனர். இதற்கு முன்பும் அவர்கள் அப்படி செலுத்தியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் குறுகிய காலத்திலாவது, கட்டணங்கள் உயர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
பங்கு விலை உயர்வு
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் விலை, மும்பை பங்குச் சந்தையில், 2.41 சதவீதம் அதிகரித்து, 12.30 ரூபாயாக வர்த்தக இறுதியில் நிலைபெற்றது. இதன் துவக்க விலை, 12.01 ரூபாயாக இருந்தது. 52 வார அதிகபட்ச விலை, 13.45 ரூபாயாகும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|