பதிவு செய்த நாள்
09 செப்2020
22:05
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் காரணமாக, நாட்டின் சுற்றுலா மற்றும் பயணங்கள் துறை, 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான இழப்பை சந்திக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலக கூட்டமைப்பான,‘சி.ஐ.ஐ.,’ மற்றும் விருந்தோம்பல் துறை ஆலோசனை நிறுவனமான, ‘ஹோட்டலிவேட்’ ஆகியவை கூட்டாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளன. இந்த ஆய்வறிக்கையில், நாட்டின் சுற்றுலா மற்றும் பயணங்கள் துறை, 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்திக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், முறைப்படுத்தப்பட்ட பிரிவில் மட்டும், 1.85 லட்சம் கோடி ரூபாய் இழப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்திய சுற்றுலா துறையில் இதுவரை இல்லாத பாதிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இது, இத்துறையின் அனைத்து பிரிவுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாக்களில் துவங்கி, சாகசப் பயணங்கள், பாரம்பரிய இடங்களுக்கு செல்லுதல், சொகுசு கப்பல் சுற்றுலா, ஓய்வுக்கான பயணம் என அனைத்து வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
துவக்கத்தில், இந்த மந்தநிலை அக்டோபர் வரை நீடிக்கும் என கருதப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.அடுத்த ஆண்டு துவக்கம் வரை, ஓட்டல்களில், 30 சதவீதம் வரை மட்டுமே அறைகள் நிரம்பும் என தெரிகிறது. வருவாயை பொறுத்தவரை, 80 முதல், 85 சதவீதம் வரை இழப்பு இருக்கும் என தெரிகிறது.
ஆய்வின் படி, இந்த ஆண்டு ஜனவரியில், 80 சதவீதம் அளவுக்கு அறைகள் நிரம்பின. இது ஏப்ரல் மாதத்தில், 7 சதவீதமாக சரிந்து விட்டது. மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே, 10, 12 , 15 மற்றும், 22 சதவீதம் ஆக இருந்தது.அடுத்து, செப்டம்பரில், 25 சதவீதமாகவும், அக்டோபரில், 28 சதவீதமாகவும், நவம்பரில், 30 சதவீதமாகவும், டிசம்பரில், 35 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிகபட்சமாக, வருவாயில், 10 முதல், 15 சதவீதம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|