பதிவு செய்த நாள்
13 செப்2020
22:33
ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள, கடன் சீரமைப்பு வசதியை நாட விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்.கொரோனா பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தாலும், அதன் பொருளாதார பாதிப்பு இன்னமும் நீடிக்கிறது.
இதன் காரணமாக, தனிநபர்கள் பலரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வங்கி கடன் பெற்றவர்கள் நிலை இன்னமும் சிக்கலாக இருக்கிறது. பலர், கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், தொடர்ந்து நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில், வங்கிகள் கடன் சீரமைப்பு வசதியை அளிக்கலாம் என, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
சீரமைப்பு வாய்ப்பு
கடன் சீரமைப்பு என்பது, கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, கடனை திரும்பிச் செலுத்தும் விதத்தை மாற்றி அமைப்பதாகும். கடன் செலுத்தப்படாமல் போவதை தடுக்க, கடன் சீரமைப்பு வசதி அளிக்கப்படுகிறது. இதன் படி, கடனுக்கான காலம் நீட்டிக்கப்படலாம், அல்லது வட்டி விகிதம் குறைக்கப்படலாம் அல்லது இரண்டும் சேர்த்து அளிக்கப்படலாம்.
கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, வங்கிகள் ஒரு முறை கடன் சீரமைப்பு வசதியை அளிக்கலாம் என, ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இந்த வசதி ஆசுவாசம் அளிக்கும் என கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை படி தனி நபர் கடன்களுக்கு இந்த வசதி பொருந்தும். தனிநபர் கடன் என்பது, வீட்டுக்கடன், வாகனக் கடன், நகை கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. வழக்கமானதாக கருதப்படும், இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் 30 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்த கடன்கள் தவிர்த்த, வழக்கமான கடன்கள் இந்த வசதியை நாடும் தகுதி உடையவை. இந்த வகை கடன்களுக்கு, வங்கிகள் தனிப்பட்ட பரிசீலனை அடிப்படையில் ஒருமுறை சீரமைப்பு வசதியை அளிக்க முன்வரலாம்.
ஆவணங்கள் தேவை
கடன் தவணை செலுத்துவதில் சிக்கல் உள்ளவர்கள், தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கியை இந்த வசதிக்காக அணுகலாம். ஆனால், இந்த வாய்ப்பு கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை நிரூபிக்கும் ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர்கள் எனில் பணி இழப்பு கடிதம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். சுயதொழில் செயப்வர்கள் எனில், ஜி.எஸ்.டி., வரி செலுத்திய விபரங்களை அளிக்கலாம்.
கடன் சீரமைப்பின் ஒரு பகுதியாக வங்கிகள், இரண்டு ஆண்டுகளுக்கு தவணை தள்ளிவைப்பு வசதியை அளிக்கலாம் அல்லது கடன் காலத்தை நீட்டித்து தவணை தொகை குறைய வழி செய்யலாம். தவணை தள்ளிவைப்பு காலத்திற்கான வட்டி, தனி கடனாக மாற்றப்படலாம். எனினும், சீரமைப்பு அம்சங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
ஒருவரது நிதி நிலை மற்றும் கடனை திரும்பிச் செலுத்தும் தன்மைக்கேற்பவும் இது அமையலாம். இந்த வசதியை நாட டிசம்பர் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீரமைப்பு அம்சங்கள், நிபந்தனைகள், வட்டி விகிதம் ஆகிய அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|