பதிவு செய்த நாள்
17 செப்2020
21:19
மும்பை,:குறிப்பிட்ட சில துறைகளில், சுயசார்புடன் இருப்பதன் மூலம், 1.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியை தவிர்க்க முடியும் என, எக்ஸிம் வங்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:எலக்ட்ரானிக்ஸ், ராணுவ சாதனங்கள், மருந்து உள்ளிட்ட சில துறைகளில், சுய சார்பை எட்டுவதன் மூலம், 1.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியை தவிர்க்க முடியும்.மேலும், இயந்திரங்கள், ரசாயனங்கள்,வேளாண் பொருட்கள் உள்ளிட்டவற்றிலும் சுயசார்பை அதிகரிப்பதன் மூலம், பெருமளவிலான இறக்குமதியை தவிர்க்க முடியும்.
அத்துடன், வாகன உதிரிபாகங்கள், அரிதான தாது பொருட்கள், உருக்கு ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.நாட்டின் மொத்த இறக்குமதியில், இந்த துறைகளின் பங்கு, 39 சதவீதமாகவும்; எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதியில், 50 சதவீதமாகவும் இருக்கிறது.நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, கடந்த 2010 – 11ம் ஆண்டில், 18.4 சதவீதமாக இருந்தது, 2019 – 20ல், 15.1 சதவீதமாக குறைந்து உள்ளது. நாட்டின் தேவைகள் வலுவாக இருந்தபோதிலும், உற்பத்தி குறைந்திருப்பதால், இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை வலுப்பெற்று வருகிறது.
ஒவ்வொரு துறையும் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சிக்கல்களை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதி சார்புநிலையை குறைக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.உதாரணமாக, வேளாண் துறை மற்றும் அரிய வகை தாது பொருட்கள் துறைகளில், உள்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக, உள்நாட்டு திறன்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உலகளவில் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், உள்நாட்டு திறன்களை அதிகரிப்பதற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு, இது சரியான தருணம் ஆகும்.இவ்வாறு எக்ஸிம் வங்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|