பதிவு செய்த நாள்
20 செப்2020
21:05
பொருளாதார
நோக்கில் பலரும் கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், இது போன்ற
சூழலில் செய்யக்கூடிய தவறுகளை தவிர்ப்பது நல்லது.
எல்லா தரப்பினருக்கும்
சோதனையான காலம் இது. உலக அளவில் பொருளாதாரம் பாதிக்க பட்டு உள்ள நிலையில்,
பெரும்பாலானோர் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். பலரும்,
பொருளாதார தேக்க நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், நிதி
திட்டமிடலை பின்பற்றுவது கடினமானது என்றாலும், பொருளாதார தேக்க நிலையில்,
பொதுவாக பெரும்பாலானோர் செய்யக்கூடிய வழக்கமான தவறுகளை செய்யாமல் இருப்பது
அவசியம்.இந்த சூழலில், செலவு செய்வது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது
தொடர்பான பொறிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, நிதி வல்லுனர்கள் வழி
காட்டுகின்றனர்.
அவசர கால நிதி
நிதி திட்டமிடலில் தவறாமல் வலியுறுத்தப்படும்
அவசர கால நிதி அருமையை, தற்போதைய நெருக்கடி தெளிவாக உணர்த்தியுள்ளது.
அவசர
கால நிதியை உருவாக்கி கொள்ளாமல் இருப்பது ஒரு தவறு என்றால், இத்தகைய நிதியை
வைத்திருப்பவர்களும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது, இன்னொரு தவறாக
அமைகிறது. ஒரு தரப்பினர், நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், அவசர
கால நிதியை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அவர்களின் சேமிக்கும் மனநிலை
உண்டாக்கிய சார்பே இதற்கு காரணம்.
நெருக்கடியில் கை கொடுப்பதற்காகவே அவசர
கால நிதி என்பதை உணர வேண்டும்.இதே போல இன்னொரு தரப்பினர், தற்போதைய
சூழலிலும் நெருக்கடிக்கு உள்ளாகாததால், அவசர கால நிதியை பயன்படுத்தும் தேவை
இல்லாமல் இருக்கின்றனர். இத்தரப்பினர், அவசர கால நிதியின் ஒரு பகுதியை
சரியான விதத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கும் இது
பொருந்தும்.
இன்னும் சிலர், நிதி நெருக்கடி காரணமாக, தங்கள் வசம் உள்ள
முதலீடுகளில் ஒரு பகுதியை விற்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இதில் தவறில்லை
என்றாலும், முதலீடுகளை விற்பவர்கள், நிலைமை சரியானதும் மீண்டும் முதலீடு
செய்வதற்கான திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நஷ்டம் தரும்
முதலீடு எனில், அவற்றை தொடர்வதை விட, வெளியேறுவது சரியாக இருக்குமா என
பரிசீலிக்க வேண்டும்.
முதலீடுகளை விலக்கி கொள்வது போலவே, பலரும் வருங்கால
வைப்பு நிதி போன்ற ஓய்வு கால சேமிப்புகளில் இருந்தும் தேவையான தொகையை
விலக்கி கொள்ள முற்படலாம். ஆனால், இது கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும்.
நம்பிக்கை தேவை
ஏனெனில், நீண்ட கால சேமிப்புகளை விலக்கி கொள்வதன் மூலம்
வருங்கால பலன்களையும், பாதுகாப்பையும் இழக்க நேரலாம். எனவே, வேறு வழிகளில்
முயற்சிக்க வேண்டும். அதே போல, வேலை இழந்தவர்கள் கிடைத்த வேலையில் சேரும்
நிலை இருந்தாலும், சம்பளம் அல்லாத மற்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், ‘கிரெடிட் ஸ்கோர்’
போன்ற விஷயங்களை பலரும் கவனிக்கத் தவறலாம். ஆனால், பில்களை செலுத்த
தவறுவது, கடன் தவணையை தவறவிடுவது போன்றவை கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
எனவே, நிலைமையை சமாளித்து கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்வது, பின்னர் பலவிதங்களில் அனுகூலமாக அமையும்.
சோதனையான காலத்தில்
பலரும் நிதி நிலை பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அவ்வாறு செய்யாமல், நிதி
விஷயங்கள் குறித்து வெளிப்படையாக குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது,
நிலைமையை சமாளிக்க வழிகாட்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|