பதிவு செய்த நாள்
21 செப்2020
22:29
புதுடில்லி:கடந்த, 10 ஆண்டுகளில், கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பு, இரு மடங்கு அதிகரித்திருப்பதாக, இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான,‘பிக்கி’ மற்றும், சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ ஆகியவற்றின் கூட்டு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில், இந்த சந்தையின் மதிப்பு இரு மடங்கு அதிகரித்து, 17.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடியிருப்புகளை ஏற்படுத்தி வரும் பிரிவில் தான் அதிகளவிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த, 2012 _ 2019 காலகட்டத்தில், இந்தியா முழுதும் உள்ள, 14 நகரங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் எண்ணிக்கை, 53 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.
இந்த துறையின் கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள், சிறிய அளவிலான நிறுவனங்கள் வெளியேறவும்; பெரிய நிறுவனங்கள் நுழைவதற்கும் வழி வகுத்தன.கடந்த, 2008ம் ஆண்டு வரை, ரியல் எஸ்டேட் வணிகம், அதிகம் முறைப்படுத்தப் படாமலும்; அந்தந்த பகுதி சார்ந்த நிறுவனங்கள் கைகளிலும் இருந்தன. இக்காலகட்டத்தில், இத்துறையானது, விற்பனையாளர்கள் சந்தையாக இருந்தது.
இந்த துறையில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியால் ஒரே இரவில் நிலச்சுவான்தாரர்கள் பலர், கட்டு மான உரிமையாளர்களாக மாறினர். மேலும், 2008ம் ஆண்டு, உலகளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்படும் வரை, இத்துறை பல்வேறு போதாமைகளுடன் இருந்தது.கடந்த, 2008 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில், இத்துறையானது முழுமையாக முறைப் படுத்தப்படாமல் இருந்த நிலையிலும், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கால்பதித்தன.
இந்நிலையில், மிகப் பெரிய நிறுவனங்களின் நுழைவு, ஒட்டுமொத்த சந்தையின் விரிவாக்கத்துக்கு வழிவகுத்தது.மேலும், இத்துறையை முறைப்படுத்தவும்; மாற்றங்களை ஏற்படுத்தவும் இவை, அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுத்தன.இதையடுத்து, கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பு, 2009ல், 6.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது,
2020 முதல் அரையாண்டில், 2.6 மடங்கு அதிகரித்து, 17.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.மேலும், இதே காலகட்டத்தில், குடியிருப்பு கட்டுமானத்தின் பங்கு, 49 சதவீதத்தில்
இருந்து, 88 சதவீதமாக உயர்ந்துள்ளது.தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, ரியல் எஸ்டேட் வணிகம் இன்று சிறப்பாக கட்டமைக்க பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி, 6.85 சதவீதம் வரை குறைந்துள்ளதால், இதுவரை இல்லாத வகையில் மலிவாகி வருகிறது. அரசாங்கமும் இத்துறையை ஆதரிக்கும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும்; வழங்குவதிலும், இரண்டாவது இடத்தை வகிக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|