பதிவு செய்த நாள்
25 செப்2020
04:41
புதுடில்லி:மிக எளிதாக காரில் உலா வரும் வகையில், மாருதி சுசூகி நிறுவனம், புதிதாக ஒரு சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு காரை சொந்தமாக வாங்காமல், ஆனால், அதற்கு சொந்தக்காரர் போல பயன்படுத்திக் கொள்ள முடியும். கொரோனா பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, பொதுத்துறை வாகனங்களை விட சொந்த வாகனத்தை பயன்படுத்தும் எண்ணம் அதிகரித்திருக்கும் நிலையில், இப்படி ஒரு திட்டத்தை, மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்த முக்கியமான அம்சங்கள:இத்திட்டத்தின்படி, நாம் ஒரு புதிய காரை சொந்தமாக வாங்காமல், மாதம் ஒரு சந்தா தொகையை கட்டி, சொந்த கார் போல பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக மாருதி சுசூகி, ஜப்பானை சேர்ந்த, ஓரிக்ஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான, ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மாருதி சுசூகியின் தயாரிப்புகளான, புதிய சுவிப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார்களில் எதை வேண்டுமானாலும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.தேர்ந்தெடுக்கும் காரை, நாம் ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை ஆண்டுகள் என்பதையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட காருக்கான வரி உள்ளிட்ட சந்தா தொகை, இடத்தை பொறுத்து சிறிது மாறும். சந்தா தொகை மாதம், 14 ஆயிரத்து, 463 ரூபாயிலிருந்து துவங்குகிறது.சந்தா தொகை என்பது பராமரிப்பு, பூஜ்ஜிய தேய்மான காப்பீடு மற்றும் 24x7 சாலையோர உதவி போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது.
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான இந்த திட்டத்தில், கால அளவை தேர்ந்தெடுக்கும் வசதியுடன், ஜீரோ டவுன் பேமென்ட், பதிவுக் கட்டணம், காப்பீடு மற்றும் காப்பீட்டை புதுப்பிப்பது, தொடர்ச்சியான பராமரிப்பு ஆகிவையும் வழங்கப்படுகின்றன.சந்தா காலம் முடிந்தபின், வாடிக்கையாளர் காலத்தை நீட்டிக்கவோ அல்லது வேறு மேம்பட்ட காரை பயன்படுத்தவோ அல்லது அதே காரை சந்தை விலைக்கு வாங்கவோ செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ், நம் பெயரில், வெள்ளை நம்பர் பிளேட்டுடன் காரை பதிவு செய்யலாம். அல்லது, கறுப்பு நம்பர் பிளேட்டுடன், ஓரிக்ஸ் நிறுவன பெயரில் பதிவு செய்யலாம். முதற்கட்டமாக டெல்லி, தலைநகர் பிராந்தியம், பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 60 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,
மாருதி சுசூகி.ஏற்கனவே ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில், மைல்ஸ் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, பைலட் திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|