பதிவு செய்த நாள்
11 அக்2020
22:01
நெருக்கடியான சூழலில் சேமிப்பு பாதிக்கப்படும் நிலையில், கட்டுப்பாடான அணுகுமுறைகள் மூலம் நிதி இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.
கொரோனா பொது முடக்கம், பலருக்கும் பலவிதமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையிழப்பு அல்லது சம்பளக் குறைப்பு காரணமாக, பலரும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க, கையில் உள்ள சேமிப்பை பயன்படுத்திக் கொண்டனர். அவசர கால நிதி உருவாக்கி வைத்திருந்தவர்கள், அதை பயன்படுத்திக் கொண்டனர்.
இன்னொரு பக்கத்தில், மாதாந்திர சேமிப்பு குறைந்து, முதலீடுகளை தொடர்வதும் பலருக்கு சிக்கலாகி இருக்கிறது. ஓய்வு கால பாதுகாப்பிற்கான, பி.எப்., பணத்தை விலக்கி கொள்ளும் வாய்ப்பையும் லட்சக்கணக்கானோர் நாடியிருக்கின்றனர்.
மாற்றம் தேவை
பல மாதங்களாக தொடரும் இந்த பாதிப்பு காரணமாக, பெரும்பாலானோர் தங்கள் மாதாந்திர செலவுகளை குறைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வாழ்வியல் சார்ந்த மாற்றங்களையும் செய்து வருகின்றனர். இது, எதிர்பாராத சோதனை தான் என்றாலும், இதனால் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்ந்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
புதிய இயல்பு நிலைக்கு ஏற்ற உத்திகளை பின்பற்றுவதன் மூலம், நிதி இலக்குகளை அடைவதற்கான வழிகளை உருவாக்கி கொள்ளலாம் என்று நிதி வல்லுனர்கள் கருது கின்றனர். இயன்றவரை செலவுகளை குறைத்துக் கொண்டு, முதலீடுகளை தொடர்வதே சரியாக இருக்கும் என்கின்றனர். வருமானம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான பல செலவுகள் குறைந்திருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், வீண் செலவுகளை கண்டறிந்து விலக்குவதும் கைகொடுக்கும். இந்த நெருக்கடி, பலருக்கும் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியிருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வாழ்வியல் தேவைகளையும் பரிசீலிக்க வைத்திருக்கிறது.
கடன் வலை
அதே நேரத்தில் கடன்களை கையாள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நெருக்கடி காரணமாக, கடன் தவணைகளை செலுத்தாமல் விடுவது, மெல்ல கடன் வலையில் சிக்க வைக்கலாம். எனவே, கடன் தவணைகளை தவறாமல் செலுத்தும் வழிகளை ஆராய வேண்டும். நிறைய கடன் இருந்தால், அதிக வட்டியிலான கடனில் இருந்து முதலில் மீள வேண்டும்.
தேவை எனில், கைவசம் உள்ள முதலீட்டின் ஒரு பகுதியை பணமாக்கி கடனை அடைக்கலாம். இவற்றுக்கு மத்தியில் நிதி இலக்குகளையும் பரிசீலிக்க வேண்டும். ஒரு சில நிதி இலக்குகளை தள்ளிப்போடுவது சரி என்றாலும், ஒட்டுமொத்த நிதி திட்டமிடல் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். அதற்கேற்ற வழிகளை கண்டறிய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, தற்போதைய நெருக்கடியை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், இதிலிருந்து மீள்வதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பை தற்காலிகமாக நிறுத்தும் நிலை இருந்தாலும், அதை மீண்டும் தொடர்வதற்கான வழிகளை ஆராய வேண்டும்.
கைவசம் உள்ள சேமிப்பு குறைவது அல்லது முழுவதும் கரைவது வேதனையானது என்றாலும், இந்த நிலையால் முடங்கி விடாமல், எதிர்கால நோக்கில் திட்டமிட வேண்டும். அவசர கால நிதியை உருவாக்குவது, காப்பீடு வசதியை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றோடு, மாதாந்திர பட்ஜெட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வதும் அவசியம்.
அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுவதன் மூலம், சேமிப்பை தொடர்வது அல்லது நிறுத்தி வைத்த சேமிப்பை புதுப்பிப்பது சாத்தியமாகும். இந்த சூழல் கற்றுத் தந்துள்ள பாடங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், நிதி இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|