பதிவு செய்த நாள்
15 அக்2020
02:41
புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்தில், 1.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை அதிகரித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவே, 0.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.16 சதவீதமாக இருந்தது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம், செப்டம்பர் மாதத்தில், 1.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மைனஸில் இருந்தது. ஏப்ரலில், மைனஸ், 1.57 சதவீதமாகவும்; மே மாதத்தில், மைனஸ், 3.37 சதவீதமாகவும் இருந்தது.
மேலும், ஜூன் மாதத்தில், மைனஸ், 1.81 சதவீதமாகவும், ஜூலையில், மைனஸ், 0.58 சதவீதமாகவும் இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 8.17 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 3.84 சதவீதமாக இருந்தது. தானியங்களின் விலை, மதிப்பீட்டு மாதமான செப்டம்பரில், மைனஸ், 3.91 ஆக குறைந்துவிட்ட நிலையில், பருப்பு வகைகளின் விலை, 12.53 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பரில் காய்கறிகள் விலை மிகவும் அதிகரித்து, 36.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உருளைக்கிழங்கின் விலை, முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 107.63 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், வெங்காயத்தின் விலை குறைந்திருந்தது.
தயாரிக்கப்பட்ட பொருட்கள் பிரிவில், பணவீக்கம், 1.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 1.27 சதவீதமாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|