பதிவு செய்த நாள்
01 நவ2020
21:56
முதலீட்டாளர்கள், 'மியூச்சுவல் பண்ட்' திட்டங்களின் இடர் தன்மையை சரியாக அறியும் வகையில், 'ரிஸ்கோமீட்டர்' அளவுகோலில் புதிய அம்சங்கள் அறிமுகம் ஆகின்றன.
மியூச்சுவல் பண்ட் முதலீடுகள், சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், முதலீட்டாளர்களில் பலர், மியூச்சுவல் பண்ட் தொடர்பான இடர் தன்மையை சரியாக அறிந்திருப்பதில்லை. அதிலும் குறிப்பாக, நிதிகள் அளிக்கும் பலனில் கவனம் செலுத்தும் அளவுக்கு, அதன் இன்னொரு பக்கமான இடர் தன்மையை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் இடர் தன்மையை உணர்த்துவதற்கான ரிஸ்கோமீட்டரை, புதிய அம்சங்களுடன் மாற்றி அமைத்திருக்கிறது. புதிய ரிஸ்கோமீட்டர், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முக்கிய மாற்றம்
மியூச்சுவல் பண்ட்களின் இடர் தன்மையை முதலீட்டாளர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், ரிஸ்கோமீட்டர் வசதியை, 2015ம் ஆண்டு செபி அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட பிரிவிலான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், எந்த அளவுக்கு இடர் தன்மை மிக்கவை என்பதை உணர்த்தும் வகையில் ரிஸ்கோமீட்டர் அமைந்திருந்தது. குறைந்த இடர், குறைவான முதல் மிதமான இடர், மிதமான இடர், மிக மிதமான இடர் மற்றும் அதிக இடர் என, ஐந்து வகையான இடர்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இவை, குறிப்பிட்ட வண்ணங்களில் அடையாளம் காட்டப்பட்டிருந்தன.
மியூச்சுவல் பண்ட் திட்ட ஆவணங்களில் ரிஸ்கோமீட்டர் வரைபடம் இடம்பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. முதலீடு செய்யும் முன், முதலீட்டாளர்கள் இடர் தன்மையை அறிந்து முடிவெடுக்க இது உதவும் என, கருதப்பட்டது. ஆனால், இடையே மியூச்சுவல் பண்ட் துறையில் ஏற்பட்ட, 'பிராங்கலின் டெம்பிள்டன்' நிறுவனத்தின் நிதிகள் மூடப்பட்டது உள்ளிட்ட நெருக்கடிகள், இந்த முறையில் உள்ள போதாமையை உணர்த்துவதாக அமைந்தன.இந்நிலையில், செபி ரிஸ்கோமீட்டரை மாற்றி அமைத்துள்ளது.
இடர் என்ன?
ரிஸ்கோமீட்டர் வசதி இடர் தன்மையை சுட்டிக்காட்டுவதாக அமைந்தாலும், அது மியூச்சுவல் பண்ட் பிரிவின் இடரை உணர்த்தியதே தவிர, அந்த பிரிவில் உள்ள குறிப்பிட்ட திட்டங்களின் இடரை உணர்த்துவதாக அமையவில்லை. மிதமான இடர் கொண்டதாக அறியப்படும் பிரிவில் ஒரு சில திட்டங்கள், அவற்றின் முதலீடு தேர்வால் அதிக இடர் கொண்டிருக்கலாம்.
எனவே, தனிப்பட்ட திட்டங்களை அறிய வழி செய்வது அவசியமானது. புதிதாக அறிமுகம் ஆக உள்ள ரிஸ்கோமீட்டர், தனிப்பட்ட திட்டங்களின் இடர் தன்மையை சுட்டிக்காட்டுவதாக அமையும்.மேலும், அதிக இடர் எனும் அம்சமும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்லாமல், நிதியின் செயல்பாட்டிற்கு ஏற்ப, மாதந்தோறும் ரிஸ்கோமீட்டர் புதிப்பிக்கப்பட்டு, அது தொடர்பான தகவல் முதலீட்டாளர்களுக்கு குறுஞ்செய்தி போன்றவை மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டின் போக்கில், இடர் தன்மையின் மாற்றம் எத்தனை முறை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இடர் தன்மையை கணக்கிடுவதற்கான தெளிவாக நெறிமுறைகளையும் செபி வெளியிட்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் திட்டம் சார்ந்த இடர்களை சரியாக அறிந்து கொண்டு முடிவெடுக்க, இந்த புதிய முறை உதவும் என கருதப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|