பதிவு செய்த நாள்
22 நவ2020
21:22
கொரோனா காலத்தில், நம் சேமிப்பு அணுகு முறை, பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், நம்முடைய தொலைநோக்குப் பார்வையையும் திட்டமிடலையும் எடுத்துக்காட்டுகின்றன. மார்ச் மாதம் முதல் நாடெங்கும் தளர்வற்ற ஊரடங்கு. பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் தனி நபர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும், நம் நாட்டின் மத்தியமர்கள் எப்போதும் கில்லி தான்.
மியூச்சுவல் பண்டு
இயல்பாகவே அவர்களிடம் முன்கூட்டியே திட்டமிடுதல் அதிகம். அவர்கள், இந்த கொரோனா காலத்தில் அதிகம் முதலீடு செய்தது சிறுசேமிப்பு பத்திரங்களிலும் முதலீடுகளிலும் தான். 1.17 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளாக, மத்தியமர்கள் முதல் சாதாரணர் வரை, ரியல் எஸ்டேட் துறையிலும் பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்து வந்தனர்.
அதிக லாபத்துக்கான வாய்ப்புகளாக இவை பார்க்கப்பட்டன.ஆனால், கொரோனா நம் மரபான பாதுகாப்புச் சிந்தனையை மீண்டும் தட்டி எழுப்பிவிட்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில், சிறுசேமிப்புப் பத்திரங்களான, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், கிஸான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்தனர்.அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் பணத்தைப் போட்டுள்ளனர். பி.பி.எப்., எனும், வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும் சேமிப்புகள் பெருகியுள்ளன.
கடந்த ஆண்டு, இதே காலக்கட்டத்தில் செய்யப்பட்ட சேமிப்புகளைவிட, இது, 25 சதவீதம் அதிகம். கடந்த ஐந்தாண்டுகளின் சராசரியைக் கணக்கிட்டால், இது, 130 சதவீதம் அதிகம்.வளரும் பொருளாதாரத்தின் பார்வையில், இது ஏதோ பிற்போக்கான சிந்தனையாக கணிக்கப்படுகிறது. மக்கள் பயந்துவிட்டனர், அதனால் தான் பாதுகாப்பு தேடி இத்தகைய சிறுசேமிப்புகளை நோக்கி நகர்ந்துவிட்டனர் என்ற கருத்தும் பேசப்படுகிறது.
நாம் இதை வேறு விதமாகப் பார்க்கவேண்டும். மழைக்காலத் தேவைக்காக தன் புற்றில், போதிய உணவைச் சேமித்துவைக்கும் எறும்புகளைப் போல் மக்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இதில் அவர்களது தொலைநோக்குப் பார்வையே பளிச்சிடுகிறது. 2008 சர்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தின் போது, இந்தியா அதிகம் பாதிப்பைச் சந்திக்கவில்லை. இதற்கு கைகொடுத்தது மக்களது சேமிப்புப் பழக்கமே.
புத்திசாலித்தனம்
அதைவிட மோசமான சூழல் தற்போது. அப்படியென்றால், இன்னும் ஜாக்கிரதையாகத்தானே இருக்கவேண்டும்.இன்னொரு கோணத்தையும் மறுப்பதற்கில்லை. இந்தக் காலக்கட்டத்தில், லாபம் ஈட்டுவதைவிட, மூலதனத்தைப் பத்திரப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் என்ற எண்ணம் பின்னணியில் செயல்பட்டிருக்கிறது.அதனால் தான் ரிஸ்க்கான சொத்துகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்ததற்கான காரணமும் இது தான்.வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் குறைந்துவந்த வேளையில், சிறுசேமிப்புத் திட்டங்கள் தான், ஒப்பீட்டளவில் கூடுதலான வட்டியை வழங்கின.அதனாலும் இந்தப் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. ஒவ்வொரு காலாண்டிலும் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது.
ஆனால், இந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டிலும், அது வட்டிவிகிதத்தைக் குறைக்கவில்லை.ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டி, 6.8 சதவீதமாக இருக்க, பி.பி.எப்., வட்டி, 7.1 சதவீதமாக உள்ளது.கிஸான் விகாஸ் பத்திரத்தின் வட்டி, 6.9 சதவீதமாக இருக்க, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்துக்கு, 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் வட்டியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஓராண்டுக்கு, சாதாரணர்களுக்கு, 4.40 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு, 4.90 சதவீதமும் தான் வழங்கப்படுகிறது.ஏற்கனவே நம் நாட்டின் முக்கிய பணவீக்கம் எனும் ‘கோர் இன்பிளேஷன்’, 5.8 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது, உங்களது பணம் வளரும் விகிதத்தைவிட தேயும் விகிதம் அதிகம். இந்நிலையில் சிறுசேமிப்புகள் மட்டுமே ஆபத்பாந்தவன்.
இதே நிலையில் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம்தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.1990களின் கடைசி வரை, சிறுசேமிப்புகளின் மூலம் திரட்டப்படும் தொகை அனைத்தும் ‘இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி’ எனப்படும் ‘கன்சாலிடேடட் பண்ட் ஆப் இந்தியா’வில் சேர்க்கப்படும்.
மத்திய அரசின் செலவுகளுக்கு இத்தொகை நேரடியாகச் செலவிடப்பட்டது. அதன் பின்னர் தான், ‘தேசிய சிறுசேமிப்பு நிதியம்’ உருவாக்கப்பட்டது. இதில் இருந்து மத்திய, மாநில அரசுகள், தங்களுடைய நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்கிக் கொள்ளலாம்.
கூடுதல் வட்டி
மத்திய அரசு தான் இந்த நிதியத்தில் இருந்து அதிக அளவில் கடன் பெற்று வருகிறது. 2015 – -16ஆம் நிதியாண்டில் 52,465 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்க, அது, 2019- – 20ல், 2.4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போதைய கொரோனா காலத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டி இருப்பதால், கிட்டத்தட்ட, 12 லட்ச கோடி ரூபாய் கடன் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இம்முறை தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து, 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
தற்போது, இந்தத் தொகையைப் பெறுவதற்கு, மத்திய அரசு, 8.5 சதவீத வட்டியை இந்த நிதியத்துக்கு வழங்குகிறது.அதாவது,சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் சின்னச் சின்ன முதலீடுகளுக்கு மத்திய அரசாங்கம் கூடுதல் வட்டியை வழங்குகிறது. இந்தக் கொரோனா காலத்திலும் மத்திய அரசின் முதுகெலும்பாக மத்தியமர்களான நாம் தான் இருக்கிறோம் என்று பெருமை பொங்கச் சொல்லலாம்.
இந்தச் சூழ்நிலையில் சில்லரை பணவீக்கம் அதிகம் இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக் குழு, அடுத்து வரும் தமது சந்திப்பில், ரெப்போ விகிதத்தைக் குறைப்பதற் கான வாய்ப்பு அதிகம்.அப்படி நடக்குமானால், மீண்டும் வங்கிகளின் வட்டிவிகிதங்கள் சரியும். வைப்பு நிதிக்கான வட்டிவிகிதங்கள் தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்பதே உண்மை.
இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, அடுத்த ஓராண்டுக்கேனும், அதாவது கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, சந்தைக்கு வந்து, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டு, பொருளாதாரம் மீண்டும் வேகம் பிடித்து, பணவீக்கம் கட்டுப்படும் வரை, சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதே இப்போதைக்கு நல்ல தீர்வு.சிறுகக் கட்டி, பெருக வாழ் என்பது இதுதானோ?தனிநபருக்கு மட்டுமல்ல, அரசுக்கும் உதவும் சிறுசேமிப்பு!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com9841053880
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|