பதிவு செய்த நாள்
22 நவ2020
21:33
வாராக்கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த லட்சுமி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் வர்த்தக தடை நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே, பி.எம்.சி., வங்கி மற்றும் யெஸ் பாங்க் ஆகிய வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளான நிலையில், எல்.வி.பி., வங்கி பிரச்னை வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த பின்னணியில் வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வங்கியின் நிதி ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான வழிகளையும் பார்க்கலாம்:
நடைமுறை மாற்றங்கள்:
வங்கி நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதன் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடையாமல், தேவையான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால், சம்பள வரவு, டிவிடெண்ட் வரவு போன்றவற்றை வேறு சேமிப்பு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
முதலீடு அம்சங்கள்:
வங்கி கணக்கில் இருந்து, மியூச்சுவல் பண்ட் முதலீடு உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்தும் வசதியை நாடியிருந்தால், அவை தொடர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவை எனில், இதற்கான உத்தரவுகளை மாற்றி சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடன் தவணை செலுத்துவதற்கும் இது பொருந்தும்.
இணைப்புக்கு பின்:
சிக்கலுக்கு உள்ளாகும் வங்கி வேறு வங்கியுடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டால், கணக்கை தொடர்வது அல்லது மாற்றிக் கொள்வது பற்றி தீர்மானிக்கலாம். டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
நிதி ஆரோக்கியம்:
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் நிதி ஆரோக்கியம் பற்றியும் அறிந்திருப்பது அவசியம். இதற்காக, வங்கி போதுமான முதலீடு விகிதத்தை கொண்டுள்ளதா என்பதையும், மொத்த வாராக்கடன் விகிதம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சந்தை மூலதனமும் முக்கிய அம்சமாக அமைகிறது.
வைப்பு நிதி:
வங்கி டெபாசிட்களைப் பொறுத்தவரை, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பாதுகாப்பு இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.ஒரே வங்கியில் அதிக தொகையை டெபாசிட் செய்வதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் டெபாசிட்களை மேற்கொள்ளலாம். வட்டி பலனை மட்டும் பார்க்காமல், பாதுகாப்பு அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|