பதிவு செய்த நாள்
22 நவ2020
21:54
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டிருக்கும் நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி ஒரு அலசல்.
அண்மையில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ், 44 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது. கொரோனா தாக்கத்தால், மார்ச் மாதம் சரிவை சந்தித்த பின், சென்செக்ஸ் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சென்செக்ஸ், 70 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை ஏறுமுகத்திற்கு பலவித காரணங்கள் இருந்தாலும், சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டிருப்பது, பங்கு முதலீட்டில் பின்பற்ற வேண்டிய உத்தி பற்றி முதலீட்டாளர்களை ஆழ்ந்து பரிசீலிக்க வைத்திருக்கிறது. அதே போல, சமபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களும், தற்போதைய சூழலில் பொருத்தமான உத்தியை யோசித்து வருகின்றனர்.
எச்சரிக்கை தேவை
பங்குச் சந்தையின் ஏறுமுகமான போக்கு காரணமாக, பெரும்பாலான சமபங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் நல்ல பலனை தரும் நிலை உள்ளது. இது புதிய முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் நிலையில், முதலீட்டில் இருந்து வெளியேறி லாபம் பார்ப்பது பொருத்தமாக இருக்குமா எனும் கேள்வியும் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்துள்ளது. சந்தை உச்சத்தை தொடும் போது லாபம் பார்ப்பது இயல்பான உத்தி என்றாலும், எச்சரிக்கையான அணுகுமுறை தேவை என, நிதி வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நிதி இலக்கு உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்கின்றனர். பொதுவாக, குறிப்பிட்ட இலக்கிற்காக முதலீடு செய்யும் போது, அதற்கான தொகை சேரும் தருவாயில் முதலீட்டை விற்று வெளியேறலாம். தற்போது, சந்தையின் ஏறுமுக தன்மையால், எதிர்பார்த்ததை விட வேகமாக இலக்கை அடையும் சாத்தியம் ஏற்பட்டு இருக்கலாம். எனில், முதலீட்டின் ஒரு பகுதியை விலக்கிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
இதன்படி பார்த்தால், நிதி இலக்கை நெருங்கும் நிலையில் இருப்பவர்கள், இந்த உத்தியை பின்பற்றலாம். இலக்குகளை அடைய நீண்ட காலம் இருந்தால், முதலீட்டை தொடர்வதே ஏற்றதாக இருக்கும்.
பரவலாக்கம்
சில மாதங்களுக்கு முன், சந்தை சரிவில் இருந்த போது, மொத்தமாக முதலீடு செய்தவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்கின்றனர். சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என கணித்து செயல்படுவதை விட, முதலீட்டு தொகுப்பின் தன்மையை பரிசீலித்து அதற்கேற்ப செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.
சந்தையின் ஏறுமுகத்தில் குறிப்பிட்ட பங்குகள் மற்றும் நிதிகள் நல்ல பலன் பெற்றுள்ளன. இந்த நிலையில், முதலீடுகளின் இடர்தன்மையை பரிசீலித்து, அதிக இடர் உள்ளவற்றில் இருந்து பகுதியளவு வெளியேறி, பாதுகாப்பான சாதனங்களில் முதலீடு செய்யலாம். இது இடர்தன்மையை குறைப்பதோடு, பரவலாக்கத்திற்கும் உதவும்.சந்தை குறியீட்டு அளவை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கைவசம் உள்ள முதலீடுகளின் ஒட்டுமொத்த தன்மையை ஆய்வு செய்து, அதனடிப்படையில் மாற்றம் தேவையா என தீர்மானிக்கலாம்.
புதிய முதலீட்டாளர்களை பொறுத்தவரை, ஏறுமுகமான சூழல் சந்தையில் நுழைய ஏற்ற தருணமா எனும் கேள்வியும் உண்டாக்கி இருக்கலாம். ஆனால், சந்தையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக கொண்டு முடிவு செய்யாமல், நிதி இலக்குகளுக்கு ஏற்ப செயல்படுவதே பொருத்தமானதாக இருக்கும். முதலீட்டிற்கான அடிப்படையான அம்சங்களையே வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|