பதிவு செய்த நாள்
24 நவ2020
11:21
நாட்டின் பொருளாதார முதுகெலும்பான தொழில் துறை, கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்தது. தொடர்ந்து, வங்கிக்கடன், தவணை செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக, தொழில் துறையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது.
இதன் பிரதிபலிப்பாக, கோவையில், 98 சதவீத பெரிய மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன. நிறுவனங்களுக்கேற்ப, 60 முதல், 70 சதவீதம் வரை என, படிப்படியாக ‘ஆர்டர்’களும் அதிகரித்து வருவது தன்னம்பிக்கையை அதிகரித்து வருகிறது.தன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முழுமைப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம். அவ்வகையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க, மாவட்டம்தோறும் ஏற்றுமதி முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இனிவரும் காலங்களில் சீனாவை நம்பியிருக்கக்கூடாது என்ற நோக்கில், பல்வேறு நாடுகள் இந்தியாவின் மீது பார்வையை திருப்பி வருகின்றன. இச்சூழலில் அமைக்கப்படும் ஏற்றுமதி முன்னேற்ற குழு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்து, பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அதன்படி, கோவை மாவட்டத்தில் கலெக்டர் தலைவராகவும், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் ஜெனரல் (கோவை) இணை தலைவராகவும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கன்வீனராகவும் கொண்டு, ‘மாவட்ட ஏற்றுமதி முன்னேற்ற குழு’ தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், எம்.எஸ்.எம்.இ., இன்ஜினியரிங் ஏற்றுமதி முன்னேற்ற கழகம் உள்ளிட்டவையும், கொடிசியா, இந்திய வர்த்தக சபை போன்ற தொழில் அமைப்புகளும் உறுப்பினர்களாக என, 12 பேர் கொண்ட குழு, ஏற்றுமதி வர்த்தகத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படும்.எந்த நாட்டிற்கு எந்த வகையான பொருட்கள் தேவை, அதை காலநிலைக்கு ஏற்ப, இங்கு தயாரிப்பது, தொழிலுக்கு உகந்த சூழல், நிறுவனங்களின் தன்மைக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்துவது உட்பட ஆலோசனைகளுடன், சிறு, குறு, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் வழிகாட்டுதலாக இக்குழு இருக்கும் என்பதால், ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்கின்றனர், தொழில் துறையினர்.
வர்த்தகத்தின் முதல் படி!
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் கூறுகையில், ‘‘கோவையில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக, மாவட்ட ஏற்றுமதி முன்னேற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாதந்தோறும் கூட்டம் நடத்தி கலந்து ஆலோசிக்கப்படும். வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான முதல் படியாக இருந்து, தொழில்முனைவோரை இக்குழு வழிநடத்தும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|