பதிவு செய்த நாள்
27 நவ2020
21:26
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாவது காலாண்டில், எதிர்பார்த்ததற்கும் மேலாக, வேகமான மீட்சியைக் கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், மைனஸ் 7.5 சதவீதமாக இருப்பதாக, அரசு அறிவித்துஉள்ளது. கடந்த நிதியாண்டு, இதே காலத்தில் வளர்ச்சி, 4.4 சதவீதமாக அதிகரித்திருந்தது.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதமாக கடும் சரிவைக் கண்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, இதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 9.5 சதவீதத்திலிருந்து, மைனஸ் 12 சதவீதம் வரை இருக்கக்கூடும் என, பல நிறுவனங்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தன.
ஆனால், எதிர்பார்ப்புக்கும் மேலாக, விரைவான மீட்சி கண்டு, வளர்ச்சி, மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த வியாழன்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வலுவாக இருப்பதாகவும்; தேவைகள் நீடித்திருக்குமா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது போலவே, நாட்டின் வளர்ச்சி வலுவாக இருப்பதை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வந்துள்ளன. இதன் காரணமாக மீட்சியும் வேகம் பிடித்துள்ளது. அடுத்த வாரம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் கூடி, வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில், பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|