பதிவு செய்த நாள்
11 டிச2020
22:14
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறையைத் தளர்த்தும் மனநிலையில், இந்திய அரசு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், காய்கறிகள், மளிகை சாமான்கள், இதரப் பொருட்கள் அனைத்தும் விலையுயர்வைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க இலக்கை நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது. சில்லரை பணவீக்கம், 4 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும். அதிகபட்சம் மேலே, கீழே, 2 சதவீதம் வரைக்கும் போகலாம் என்ற சலுகையும் உண்டு.இந்த ஆண்டு தொடக்கம் வரை கூட, இந்த இலக்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்,
பணவீக்கம் கிடுகிடுவென உயரத் துவங்கிவிட்டது.அக்டோபர் மாதம், சில்லரை பணவீக்கம், 7.61 சதவீதம். ஜூன் மாதம் முதலே, 6 சதவீதத்துக்கு மேல் தான் பணவீக்கம்.
எதிர்பார்ப்பு
வங்கிகளின் வட்டி விகிதங்கள் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைவாக உள்ளன.
சந்தையில் பணப்புழக்கம் அதிகம்.சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசும்போது, பணபுழக்கத்தைக் குறைக்கும் திட்டம்ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
அதாவது, பணப்புழக்க அதிகரிப்பால், கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வங்கும் நிலை உருவாகிறது. கூடவே, பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்வதால்,
பணவீக்கம் பெருகி வருகிறது.
இந்நிலையில், அரசாங்கம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், அரசு வேறு மாதிரி யோசிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முனைந்தால், துளிர்விட்டு வரும் தொழில், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம். பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களின் வட்டி கணிசமாக உயர்ந்துவிடலாம்.
அதனால், அவர்களும் தொழிலில் ஆர்வம் காட்டாமல் போய்விடலாம். இதன் காரணமாக,
4 சதவீத பணவீக்க இலக்கை, மேலும் தளர்த்தலாம் என்று கருத்து நிலவுகிறது.இது, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். சாதாரணர்களும், ஓய்வூதியர்களும் போடும் வங்கி முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி, தொடர்ந்து குறைவாகவே இருக்கும்.அவர்கள், வேறு முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி நகர்ந்துவிடுவர் அல்லது குறைவான வட்டியைப் பெற்று, வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டே இருப்பர்.இன்னொரு பக்கம், குறைவான வட்டிக்கு ஆசைப்பட்டு, கூடுதல் தொகை கடன் வாங்குவோர், கடனைக் கட்டமுடியாமல், திண்டாடுவர். வாராக்கடன் பெருக இதுவே காரணம்.
திணறல்
ஏற்கனவே, வாகனங்களின் விலைகளும் உயரப் போகின்றன. இதே நிலை தொடருமானால், அடுத்த ஆண்டு, மருத்துவ கட்டணம், கல்விக் கட்டணங்கள், இதர கட்டணங்களும் உயரக்
கூடும்.மத்தியமர்களே திணறுகின்றனர் என்றால், ஏழை எளியவர்கள் நிலை?உண்மையில் இப்போது, இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். இல்லையெனில், செருப்புக்காக காலை வெட்டிக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதே நிபுணர்கள் கருத்து.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|