பதிவு செய்த நாள்
13 டிச2020
21:45
அடுத்த நிதியாண்டில், உங்கள் சம்பளத்தில் ஒரு முக்கிய மாறுதல் ஏற்படப் போகிறது. அதற்கு நீங்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும். எப்படி?
ஏப்ரல் 2021 முதல், புதிய ஊதியக் கொள்கை அமலுக்கு வரப் போகிறது. சம்பளத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று ஊதியம். இதில் அடிப்படைச் சம்பளமும், அகவிலைப் படியும் அடங்கும். இன்னொன்று, அலவன்ஸ் எனும் படிகள்.
பி.எப்.,பில் பணம் சேராது
இதில் தான் போக்குவரத்து, மருத்துவம், வீட்டு வாடகை போன்ற அனைத்துப் படிகளும் அடங்கும்.புதிய ஊதியக் கொள்கையின் படி, உங்களுடைய அடிப்படைச் சம்பளமும், அகவிலைப் படியும், மொத்த சம்பளத் தொகையில், 50 சதவீதம் இருக்க வேண்டும். பி.எப்., மற்றும் பணிக்கொடை அதாவது, கிராஜுவிட்டி ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு, இந்த ஊதியமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள, 50 சதவீதம் தான் படிகளாக இருக்க முடியும். இந்த வரையறைக்கு ஏற்ப, தனியார் துறை நிறுவனங்கள், தம் சம்பள விகிதங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமான இந்த மாற்றத்தில் பலனும் உண்டு; சிரமங்களும் உண்டு. முதலில் பலனை பார்ப்போம்.பல தனியார் நிறுவனங்களில், படிகள் தான் அதிகமாக இருக்கும். அடிப்படைச் சம்பளமும், அகவிலைப் படியும் குறைவே. இதனால், போதிய அளவு, பி.எப்., எனும் வருங்கால வைப்பு நிதியில் பணம் சேராது. தற்போது, புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, உங்கள் பி.எப்., பங்களிப்பும் அதிகமாகும்.
நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பும் அதிகமாகும். கண்மறைவாக நடைபெறும், மிகப்பெரிய சேமிப்பு இது.இன்றைய நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கு தான் அதிகபட்ச வட்டியும் கிடைத்து வருகிறது. வேறு முதலீடுகளைவிட, நல்ல சேமிப்பும், அதற்கான கூடுதல் வட்டியும் கிடைக்கும் போது, வேண்டாம் என்றா சொல்வோம்!இதேபோல், ஓய்வு பெறும்போது கிடைக்கும், பணிக்கொடை தொகையும் அதிகரிக்கும்.
கூடுதல் வருவாய் ஈட்ட முடியுமா
ஆனால், ஒவ்வொரு மாதமும் கிடைக்கும், ‘டேக் ஹோம் சாலரி’ எனும், நிகர சம்பளம் குறைய வாய்ப்புள்ளது என்பதுதான், இதில் உள்ள சிரமம்.புதிய ஊதியக் கொள்கையால், வருங்கால வைப்பு நிதிக்காகப் பிடித்தம் செய்யப்படும் தொகை அதிகமாகும். இன்னொரு பிரச்னையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். பல தனியார் நிறுவனங்கள், இந்தக் கொரோனா காலத்தில், 15 முதல் 50 சதவீதம் வரைக்கும் சம்பளத்தை வெட்டின. அது, இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை.
நடப்பாண்டில் பல நிறுவனங்களில், ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரலிலும், இது வழங்கப்படும் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. ‘ஏப்ரல் 2021 முதல், ஓய்வுகாலச் சேமிப்புக்காக, கூடுதல் தொகை பிடித்தம் செய்யப்படுமானால், நிகழ்காலத்தில் எப்படி வாழ்வது? கையில் போதிய பணமில்லாமல், மக்கள் திண்டாட வேண்டுமா? ‘அதை விட, ஓய்வுக்கால சேமிப்பு என்பதை, அவரவர் சுய முடிவுக்கு விட்டு விடலாமே? ஏன் வலிந்து ஓர் ஊதியக் கொள்கையைக் கொண்டுவந்து சிரமப்படுத்த வேண்டும்?
‘மாதச் சம்பளக்காரர்கள், சம்பாதிக்கும்வரை இப்படிப் பிழியப்படுகின்றனர், அவர்களுக்கு வேலை போனால், வாழ்வாதாரத்துக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?’ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.கேள்விகள் அப்படியே இருக்க, நாம் வாழ்வதற்கான வழிமுறையையும் யோசிக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. என்னென்ன கடன்களுக்கு, இ.எம்.ஐ., கட்டுகிறீர்கள் என்று பாருங்கள். அவற்றைக் குறைத்துக் கொள்ள திட்டமிடுங்கள்.
ஒன்றுக்கு இரண்டு, மூன்று வேலைகளைச் செய்து, கூடுதல் வருவாய் ஈட்ட முடியுமா என்று யோசியுங்கள்.செலவுகளை அத்தியாவசியம், அவசர காலம், ஆசைக்குரியது என்று பிரித்துக் கொள்ளுங்கள்.முதல் இரண்டுக்கு முன்னுரிமை கொடுங்கள்; மூன்றாவதுக்கு காத்திருக்கலாம். கையில் பணம் குறைந்து விட்டதே என்று, வங்கி ஆர்.டி., எனும் தொடர் வைப்பையோ, மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,களையோ, நிறுத்திவிட வேண்டாம்.அவசரத் தேவையிருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். விரலின் வீக்கம் குறையப் போகிறது!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com 9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|