பதிவு செய்த நாள்
13 டிச2020
22:00
உலக நாடுகளுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும் சரி, விடை பெற இருக்கும், 2020ம் ஆண்டு சோதனை மிக்கதாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் உண்டான பொது முடக்கம், பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தது. பலரும், பணி இழப்பு மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இயல்பு நிலை என்பது தலைகீழாக மாறி, எங்கும் புதிய இயல்பு உண்டானது. இந்த பாதிப்புகளில் இருந்து பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், 2020ம் ஆண்டு கற்றுத் தந்துள்ள நிதி பாடங்களை நினைவில் கொள்வது நல்லது.
சேமிப்பு முக்கியம்:
கொரோனா உண்டாக்கிய புதிய இயல்பு நிலை, சேமிப்பின் அருமையை அனைவருக்கும் புரிய வைத்தது. வேலை இழப்பு அல்லது ஊதிய குறைப்பை எதிர்கொள்ளும் போது, கைவசம் சேமிப்பு இருப்பது எத்தனை ஆசுவாசம் அளிக்கக்கூடியது என்பதை பலரும் நடைமுறையில் உணர்ந்தனர்.
செலவு பழக்கம்:
சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு, அதற்கான வழியையும் இந்த ஆண்டு கண்டறிய வைத்துள்ளது. கொரோனாவின் ஆரம்ப மாதங்களில், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த சூழல், செலவுகளை தானாக கட்டுப்படுத்தியது. அதைவிட முக்கியமாக, எவை எல்லாம் அனாவசிய செலவுகள் என புரிய வைத்தது.
காப்பீடு தேவை:
கொரோனா பாதிப்பு, மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தையும் தெளிவாக உணர்த்தியுள்ளது. எதிர்பாராத மருத்துவ நெருக்கடியை சமாளிக்க, மருத்துவக் காப்பீடு பாதுகாப்பு எத்தனை அவசியம் என்பது புரிந்துள்ளது. விரிவான மருத்துவக் காப்பீடு பாலிசி தவிர, கொரோனா காப்பீடு போன்ற குறிப்பிட்ட நோக்கிலான பாலிசிகளும் அவசியம்.
கடன் சுமை:
கொரோனா பாதிப்பு சூழலில், கடன் சுமை இல்லாதவர்கள் ஆசுவாசமாக உணர்ந்தனர். மாறாக, ‘கிரெடிட் கார்டு’ கடன் அல்லது தனிநபர் கடன் பெற்றிருந்தவர்கள் நெருக்கடியை உணர்ந்தனர். அதிலும் குறிப்பாக பணி இழப்புக்கு உள்ளானவர்கள், கடன் சுமையால் அவதிப்பட்டனர். தேவையில்லாத கடன்களை தவிர்ப்பது அவசியம் எனும் புரிதல் ஏற்பட்டுள்ளது.
முதலீடு உத்தி:
இந்த ஆண்டு, தங்கத்தின் விலை ஏறியது; பங்குச் சந்தை, ஆரம்ப சரிவுக்கு பின் ஏற்றம் கண்டது; ரியல் எஸ்டேட், நெருக்கடிக்கு உள்ளானது. இப்படி பல்வேறு வகையான முதலீடுகள், கொரோனா சூழலில் பலவிதமான பாதிப்புக்கு உள்ளான நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், முதலீடுகளை பரவலாக மேற்கொள்வதன் அவசியமும் புரிந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|