பதிவு செய்த நாள்
22 டிச2020
09:19
சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில், பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டாலும், நிறுவனங்கள், வியாபாரிகளை பாதிக்காத விதத்திலும், ரயில்கள் வாயிலாக வணிக சேவை வழங்கப்பட்டது.சரக்கு ரயில் சேவையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்கள் சேவையை எளிமையாக்கவும், www.fois.indianrail.gov.in/RailSAHAY/index.jsp எனும் சரக்கு வணிக மேம்பாட்டு இணைய முகப்பு (போர்ட்டல்) ஒன்றை சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.சரக்கு வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, வழக்கமான வாடிக்கையாளர் மட்டுமின்றி, தொழில் துறையினர் மீது, குறிப்பாக, புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, சேலம், சென்னை, மதுரை, பாலக்காடு என, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களிலும், வர்த்தக மேம்பாட்டு குழு (பி.டி.யு.,) சமீபத்தில் அமைக்கப்பட்டது. இது, ரயில்வே நிர்வாகத்தையும், வாடிக்கையாளர்களை நேரடியாக இணைக்கும் பாலமாகவும் விளங்கி வருகிறது.மோட்டார் பம்ப் செட், இயந்திர பாகங்கள், டெக்ஸ்டைல் என, தொழில் நகரான கோவையிலும், பனியன் வர்த்தகத்துக்கு பெயர்பெற்ற திருப்பூர், அதற்கடுத்து, ஈரோடு, சேலம் உட்பட பகுதிகளில் நுாற்றுக்கணக்கானோர் பி.டி.யு., மற்றும் இணைய சேவை வாயிலாக இணைந்து வருகின்றனர்.குறிப்பாக, தொழில் துறையினரை ஈர்த்து சேவைகளையும், தேவைகளை அதிகரிக்கும் நடவடிக்கையில், சேலம் ரயில்வே களமிறங்கியுள்ளது. சரக்கு முன்பதிவு செய்யும் தொழில் துறையினர் அலைச்சலை தவிர்ப்பது, வேண்டிய வசதிகளை ஏற்படுத்தி தருவது போன்ற நடவடிக்கையில், வர்த்தக மேம்பாட்டு குழு ஈடுபட்டுள்ளது.ரயில்வே மூத்த அதிகாரிகள் கொண்ட இக்குழு, தொழில் துறையினர், வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது, சரக்குகள் சென்றடைவதை வேகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
தொழில் துறையினர் உறவு அவசியம்!
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:சரக்கு வர்த்தகத்தை வரும், 2024ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, தொழில் துறையினருடனான உறவு மிக அவசியம். எனவே, ‘கஸ்டமர்ஸ் பிரண்ட்லி’ ஆக இருந்து வர்த்தகத்தை அதிகரித்து வருகிறோம். ரயில்வே நிர்வாகம் இதற்கு முன் சரக்கு வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கலந்துரையாடியது குறைவு தான்.தற்போது அமைக்கப்பட்ட வர்த்தக மேம்பாட்டு குழு, தொழில் துறையினர் உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து வருகிறது. அவர்களுடன் கலந்துரையாடி, ரயில்வே தரப்பில் தேவைகளை நிறைவேற்றுவதுடன், சலுகைகள் பெற்றுத்தரவும் தற்சமயம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, தொழில் துறையும் வளர்ச்சி அடைவதுடன், ரயில்வேக்கு வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|