பதிவு செய்த நாள்
25 டிச2020
21:26
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, திங்கள் கிழமையன்று துவங்குகிறது. இந்த ஒன்பதாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இம்மாதம், 28ம் தேதி துவங்கி, ஜனவரி, 1ம் தேதியுடன் முடிவடைகிறது.
விலை நிர்ணயம்
நடப்பு நிதியாண்டில், தங்க பத்திரங்களை, பல கட்டங்களாக, வெளியிட இருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், திங்களன்று நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது, தங்கத்தின் விலை, 5,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘கிரெடிட், டெபிட்’ கார்டு, வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
விற்பனை
இதனால், கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,950 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.தனிநபர்களை பொறுத்த வரை, குறைந்தபட்சமாக, 1 கிராமிலிருந்து, அதிகபட்சமாக, 4 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம்.
அறக்கட்டளை போன்றவை, 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திர வெளியீடு அறிமுகம் ஆனதிலிருந்து இதுவரை, 30.98 டன் அளவிலான தங்கம், 9,653 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|