பதிவு செய்த நாள்
27 டிச2020
21:53
புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நிதி திட்டமிடலை சீராக்கிக் கொள்ள,
நிதி ஆரோக்கியத்தை ஆய்வு செய்வது அவசியம்.
சவால் மிகுந்த ஆண்டாக அமைந்த, 2020ல் நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பின் அவசியத்தை
நன்கு உணர்த்தியுள்ளது.எதிர்பாராத நெருக்கடிகளைசமாளிப்பதற்கான அவசர நிதியின் தேவையையும் புரிய வைத்துள்ளது.சவாலான இந்த ஆண்டு விடை பெற்று, புதிய ஆண்டு பிறக்கும் நிலையில், ஒவ்வொருவரும்தங்களது நிதி திட்டமிடல் சரியான பாதையில் அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
நிதி திட்டமிடலில் மாற்றம் தேவையா என்பதை அறிய, நிதி நோக்கம் தொடர்பான
அம்சங்களை ஆய்வு செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
வரவு – செலவு கணக்கு
நிதி ஆய்வை ஒவ்வொருவரும் தங்களது சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பான பட்டியலில் இருந்து துவங்கலாம். இந்த பட்டியல், எந்த எந்த வகையில் சேமிப்பு, முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை புரிய வைக்கும்.மேலும், முதலீடுகளின் பணமாக்கும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். இது, இலக்குகளுக்கு ஏற்ப சேமிப்பு, முதலீடுகளை மேற்கொள்ள
உதவும். முதலீட்டில் உள்ள இடைவெளியையும் தெரிந்து கொள்ள வழி செய்யும்.
சிறந்த நிதி திட்டமிடல் என்பது, வரி சேமிப்பு, ஓய்வு காலம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆண்டு இறுதியில் நிதி
விஷயங்களை பரிசீலனை செய்வது, வாழ்க்கை தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ற வகையில் முதலீடுகள் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள உதவும்.வரி சேமிப்பிற்கான முதலீடுகளை இன்னமும் மேற்கொள்ளவில்லை எனில், அதற்கான
நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். தேவை எனில், நிதி ஆலோசகர்களின்
வழிகாட்டுதலையும் நாடலாம்.
கடன் சுமை அதிகமிருந்தால், அதிலிருந்து விடுபடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ‘கிரெடிட் கார்டு’ கடன், தனிநபர் கடன் போன்ற அதிக வட்டி கடன்களை முதலில் அடைக்க வேண்டும்.
நிதி இலக்குகள்
நிதி திட்டமிடலில் முதலீடு ஒதுக்கீடு என்பது முக்கிய அம்சமாகும். முதலீடு செய்யப்பட்டு உள்ள சாதனங்கள், நிதி இலக்குகள் மற்றும் இடர் தன்மைக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும். முதலீடு தொகுப்பு என்பது தனிநபர் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடுவதால், ஒவ்வொருவரும் தங்கள் நிதி நிலைமைக்கு பொருத்தமான முதலீடு தொகுப்பை பெற்றிருக்க வேண்டும்.
முதலீடுகளின் செயல்பாட்டை அவ்வப்போது ஆய்வு செய்வதும் அவசியம் என்பதை உணர
வேண்டும். குறிப்பிட்ட ஒரே வகையில் முதலீடுகள் அமையாமல் பரவலாக இருப்பது
அவசியம்.
அதே போல, நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இதற்காக வரவு – செலவு கணக்கை ஆய்வு செய்து, செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அவசர கால நிதி
இல்லாதவர்கள் உடனடியாக அதை உருவாக்கி கொள்ள வேண்டும்.ஏற்கனவே இத்தகைய நிதி உள்ளவர்கள், அதை அதிகரிப்பது பற்றியும் பரிசீலிக்கலாம். தேவைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தனி சேமிப்பு பிரிவுகளையும் உருவாக்கி கொள்ளலாம்.
போதுமான காப்பீடு பாதுகாப்பு இருப்பதையும், ஓய்வு காலம் உள்ளிட்ட நீண்ட கால
அடிப்படையிலான முதலீடுகள் சரியாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|