பதிவு செய்த நாள்
29 டிச2020
11:37
புதுடில்லி: ஜனவரியிலிருந்து, 'டிவி' மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க உள்ளது.
மூலப் பொருட்களான செம்பு, அலுமினியம், உருக்கு போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டண உயர்வு ஆகிய காரணங்களால், எல்.இ.டி., டிவி, ப்ரிஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களின் விலை, ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்க உள்ளது. இவற்றின் விலை கிட்டத்தட்ட, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, டிவி பேனல்கள் விலையும், 'சப்ளை' குறைவு காரணமாக, இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பிளாஸ்டிக்கின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனாலும், டிவி விலையை அதிகரிக்கும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.எல்.ஜி., பானாசோனிக் மற்றும் தாம்சன் போன்ற நிறுவனங்கள், ஜனவரி முதல் விலையை அதிகரிக்க உள்ளன. இருப்பினும், சோனி இன்னும் நிலைமையை மறுபரிசீலனை செய்து வருகிறது. விலை உயர்வு குறித்து, இதுவரை இந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
விலை உயர்வு குறித்து, பல நிறுவனங்களின் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்:
மனிஷ் ஷர்மா, தலைமை செயல் அதிகாரி, பானாசோனிக் இந்தியா: மூலப் பொருட்களின் விலை உயர்வு, எங்கள் தயாரிப்புகளின் விலையையும் பாதிக்கிறது. எங்கள் தயாரிப்புகளின் விலை விரைவில், 6 - 7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 - 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
விஜய் பாபு, துணைத் தலைவர், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்: நாங்கள் 7 - 8 சதவீதம் அளவுக்கு, டிவி, வாஷிங் மிஷின், ப்ரிஜ் என அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சுனில் நய்யார், நிர்வாக இயக்குனர், சோனி இந்தியா: நாங்கள் விலையை அதிகரிப்பது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போதையை நிலையில், சிறிய திரை அளவைக் கொண்ட டிவிகளின் விலை, பெரிய சிக்கலில் தான் உள்ளது.அவற்றின் பேனல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பெரிய திரையளவு கொண்ட டிவிகளுக்கும் விலை அதிகரிப்பு இருப்பினும், அது பெரிய பிரச்னையாக இருக்காது.ஆனால், இந்தியா இன்னும், 32 அங்குல திரை அளவுக்கான சந்தையாகவே உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நிறுவனங்களின் விலையை அதிகரிக்கும் இந்த முடிவு, அடுத்த காலாண்டில், ஒட்டுமொத்த தேவையை பாதிப்பதாக அமையக்கூடும் என, நுகர்பொருள் மின்னணுவியல் மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பான, சி.இ.ஏ.எம்.ஏ., எச்சரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|