பதிவு செய்த நாள்
29 டிச2020
13:24
கோவையில் மோட்டார் பம்ப் செட், கிரில், இன்ஜினியரிங், கிரைண்டர் தயாரிப்பு என, 5,000க்கும் அதிகமான சிறு, குறு தொழிலகங்களில், 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
தவிர, மில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இங்கு, காலை, இரவு என ‘ஷிப்ட்’ முறையிலும், கூடுதல் பணி நேரம் அடிப்படையிலும், பணிகள் முடிக்கப்படுகின்றன.கொரோனா காரணமாக, கோவையில் கட்டுமானம், தொழிற்கூடங்கள் என, பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர்.இவர்களில் பலர், மீண்டும் வேலைக்கு திரும்பாததால், உள்ளூர் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிலை, கோவையில் மட்டுமின்றி, பனியன் உற்பத்திக்கு பெயர்பெற்ற திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் காணப்படுகிறது. தற்போது, இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் தொழில்முனைவோருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் தொழிலாளர் பற்றாக்குறை வேறு.
இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:கொரோனா காரணமாக, ஆறு மாதங்களுக்கு மேலாக முடங்கிக்கிடந்த தொழில், தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பணியாளர் பற்றாக்குறை என்பது மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பொருட்களை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து தரமுடியாததுடன், கூடுதல் சம்பளம் கேட்கும் பணியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
கோவை ‘ஜாப் ஆர்டர்’கள் செய்துகொடுக்கும் சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பி தொழில்புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த அளவில் தான் மணி நேரத்துக்கு (ஹவர்) ஏற்ப சம்பளம் வழங்கும் நிலை தற்போது உள்ளது.ஊதியம் போதுமான அளவுக்கு வழங்க முடியாததால், ஆட்கள் வருகையும் குறைந்து வருகிறது. எனவே, ஜாப் ஆர்டர்கள் செய்யும் தொழில்முனைவோரை பாதுகாக்க, ஏற்கனவே வழங்கிவரும் தொகையில் இருந்து மணி நேரத்துக்கு, உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும், 50 சதவீதம் சேர்த்து வழங்கினால் உதவியாக இருக்கும்.மேலும், பணியாளர் பற்றாக்குறையால், ஜாப் ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடித்து தரும் ‘ஷிப்ட்’ முறை பாதிக்கப்படுகிறது. காலை, இரவு என்பது, தற்போது ஒரு ஷிப்ட் தான் பணிபுரிய ஆட்கள் இருக்கின்றனர்.
அதேபோல், உள்ளூர் பணியாளர்கள் அதிக சம்பளம் கேட்பதால் தொழில் நடத்துவது சிரமமாக உள்ளது.பணியாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண, மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்களை அரசு நிறுவி வேலை வாய்ப்பற்றவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க வேண்டும். இதன் வாயிலாக, இக்கட்டான சமயங்களில் பணியாளர்களை பெறமுடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|