பதிவு செய்த நாள்
05 ஜன2021
20:25
பொங்கல் பண்டிகையை ஒட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதனால் பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் போன்ற தியேட்டர் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக திரையரங்குகள் போன்ற கேளிக்கை இடங்கள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தன. அத்தொழிலில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் 50% இருக்கைகளை மட்டும் நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு திங்களன்று நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியை சந்தித்து இக்கோரிக்கையை வைத்திருந்தார். பல கோடி ரூபாய் செலவில் தயாரான அவரது மாஸ்டர் படம் ஏப்ரலில் வெளியாகியிருக்க வேண்டியது. தற்போது அரசின் அறிவிப்பால் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
தமிழக அரசின் இம்முடிவால் பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் போன்ற தியேட்டர் நிறுவன பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டுள்ளன. திங்களன்று இறங்குமுகத்தில் இருந்த பி.வி.ஆர்., பங்குகள் தற்போது 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளன. ஐநாக்ஸ் பங்குகளும் 6 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. முன்னதாக நவ., மாதம் மஹா., அரசு தியேட்டர்களை திறக்க அனுமதித்த போது இப்பங்குகள் அதிகளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஊரடங்கு வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்த மருத்துவர் பிரப்தீப் கவுர் மக்களை எச்சரித்துள்ளார். டுவிட்டரில் தியேட்டர் படத்தை வெளியிட்டு, “சமூக இடைவெளி இல்லாத மூடிய பகுதி என்பது கொரோனா வைரஸ் வெடித்து பரவ ஏற்ற இடம். இது போன்ற அமைப்புகளை மக்கள் தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|