பதிவு செய்த நாள்
24 ஜன2021
22:01
ஏறுமுகமான சந்தை,புதிய வாய்ப்புகளை கொண்டிருக்கிறதா அல்லது எச்சரிக்கையான அணுகுமுறை தேவையா என்பது பற்றி ஓர் அலசல்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் சரிவை சந்தித்த பங்குச்சந்தை இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில், இறங்குமுகத்திற்கு உள்ளான பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் அதன் பிறகு எழுச்சி கண்ட நிலையில் கடந்த வாரம், 50 ஆயிரம் புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டது. வார இறுதியில் சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தாலும், பங்குச்சந்தையின் ஏறுமுகமான போக்கு முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சந்தையின் போக்கு மற்றும் முதலீட்டு உத்தி தொடர்பான கேள்விகளையும் கேட்க வைத்துள்ளது.
தயக்கம் வேண்டாம்!
தற்போதைய சூழலுக்கு ஏற்ற முதலீட்டு உத்தியை தீர்மானிப்பதற்கு, சந்தை ஏறுமுகத்திற்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா சூழலில் உண்டான பாதிப்பை சரி செய்ய, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் நிதி அமைப்பில் பண புழக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக பொருளாதார மீட்சி தொடர்பான நம்பிக்கையில் சந்தை ஏறுமுகம் கண்டது.
தொடர்ந்து தடுப்பூசி அறிமுகம் நல்ல செய்தியாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர் களும் இந்திய சந்தையில் ஆர்வம் காட்டியதால் சந்தையின் ஏறுமுகம் தொடர்ந்தது. சந்தையின் எழுச்சி காரணமாக பங்கு முதலீட்டாளர்கள் நல்ல பலனை அறுவடை செய்துள்ளனர். ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் முதலீட்டை தொடர்ந்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். ஆனால், சந்தை உச்சத்தை தொடும் நிலையில் முதலீட்டை தொடர்வது சரியாக இருக்குமா? அல்லது பங்குகளை விற்று லாபம் பார்ப்பது சரியாக இருக்குமா? எனும் தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளது.பங்குகளின் சந்தை மதிப்பு மிகை அளவை தொட்டிருப்பதாக சொல்லப்படுவதும் யோசிக்க வைத்துள்ளது.
புதிய முதலீடு
ஆனால், சந்தை ஏறுமுகத்தில் இருப்பதால் முதலீட்டை நிறுத்துவது தேவையில்லை என்று முதலீட்டு வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏறுமுகத்திற்கு காரணமாக அமைந்த அம்சங்களின் பலன் ஏற்கனவே பங்கு சந்தையால் உள்வாங்கி கொள்ளப்பட்டுள்ளன என்பதும், சந்தை திருத்தத்திற்கு உள்ளாக வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது என்றாலும், முதலீட்டாளர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம் என்கின்றனர்.
வர்த்தக நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளின் போக்கு, தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் சந்தையின் போக்கு அமையலாம். சந்தையின் எழுச்சி, புதிய முதலீட்டாளர்களுக்கு, இந்த நிலையில் சந்தையில் நுழைவது பொருத்தமாக இருக்குமா எனும் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக சந்தைக்கு வருபவர்கள், பலனை குறி வைக்காமல், நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
இலக்குகளுக்கு ஏற்ப கடன்சார் முதலீடு மற்றும் பங்கு முதலீடு என பிரித்துக் கொள்வதும் பொருத்தமாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் எடுக்க வேண்டிய தேவை இல்லாத தொகையை பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த கட்டத்தில் படிப்படியாக முதலீடு செய்வது மற்றும் விரிவாக்க உத்தியை கடைப்பிடிப்பது உகந்தது. இதற்கு எஸ்.ஐ.பி., முறையில் சமபங்கு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடுவதும் சரியான உத்தியாக அமையும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|