பதிவு செய்த நாள்
26 ஜன2021
14:40
கொரோனாவால் முடங்கிய தொழில் துறையை, மீண்டும் தலைநிமிரச் செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. வங்கிக்கடன் உட்பட திட்டங்களால் படிப்படியாக மீள ஆரம்பித்த தொழில் துறைக்கு, இரும்பு உட்பட மூலப்பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.
திணறும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவும் கூடிவருகிறது. இரும்பு விலையும் இமயம்போல் உயர்வதால் கட்டுமான பணிகளும் காலதாமதமாகி வருகிறது. நாளுக்கு நாள் விலை அதிகரிப்பால், முன்பு எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், தொழில் துறையினர் புலம்புகின்றனர்.கடந்தாண்டு நவ., மாதம் ஆரம்பித்த விலை உயர்வு, தொழில் துறையை முடக்கி வருவதால் இரும்பு தாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, இறக்குமதிக்கு வழிவகுக்க, மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
தொழில் முனைவோர் கூறியதாவது:கடந்தாண்டு இறுதியில், 64 ஆயிரமாக இருந்த சாதாரண இரும்பு, தற்போது, 76 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலையால், உற்பத்தி செலவும் கூடிவருகிறது. எனவே, வெளிநாடுகளுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்புக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், சீனா போன்ற நாடுகளுக்கு இரும்பு தாது அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சத்தீஸ்கர் போன்ற வடமாநிலங்களில் இது அதிகம் கிடைப்பதால் அங்கிருந்து அனுப்பப்படுகின்றன.
எனவே, ஏற்றுமதியை, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நிறுத்தி வைத்தால் விலை உயர்வு கட்டுக்குள் வருவதுடன், தட்டுப்பாடும் நீங்கிவிடும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாக இரும்பு தயாராக உள்ளது. இறக்குமதி வரியை குறைத்து அரசு நடவடிக்கை எடுத்தால், பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|